8ஆம் வகுப்பு தேறியவரா நீங்கள்? தெற்கு ரயில்வேயில் உங்களுக்கு வேலை இருக்கு!


8ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தெற்கு ரயில்வே வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது. வேலைவாய்ப்பைத் தேடி அலைவோர் தான் நம் நாட்டில் அதிகம். அதுவும் கொரோனா பெருந்தொற்று வேலையிழப்பை வெகுவாக அதிகரித்துள்ளது. அதனால், ஏதாவது ஒரு வேலை அதன் மூலம் நிரந்தர வருமானம் கிடைத்தால் போதும் என்ற மனநிலை மேலோங்கி நிற்கிறது. இந்நிலையில், மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியுடோர் விண்ணப்பிக்கலாம்.


என்ன தகுதி?
மத்திய அரசு அல்லது மாநில அரசின் பாடத்திட்டங்களின் கீழ் 8ஆம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது மட்டும்தான் தகுதி. இந்தப் பணியில் சேர முன் அனுபவம் ஏதும் தேவையில்லை. அதேபோல் வயது வரம்பும் எதுவுமில்லை. இந்தப் பணியில் சேர்பவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7000 முதல் அதிகபட்சமாக ரூ.7770 வரை மாதச் சம்பளம் கிடைக்கும்.


பணி எங்கே?
திருவனந்தபுரத்தில் உள்ள ரயில்வே மண்டல அலுவலகத்தில் கார்பென்ட்டர் பணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன. எழுத்துத் தேர்வு, நேர்காணல் எதுவுமில்லை. தகுதி அடிப்படையில் பணியில் சேர்க்கப்படவுள்ளனர். இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணபிக்கலாம். apprenticeshipindia.org என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை அறியலாம்.