விமானத்தில் புகை பிடித்த பிரபலம்... விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அமைச்சர்
ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்குள் சமூக ஊடக பிரபலம் ஒருவர், புகை பிடித்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்குள் சமூக ஊடக பிரபலம் ஒருவர், புகை பிடித்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதையடுத்து, அவருக்கு எதிராக காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை கோரிக்கை விடுத்துள்ளது.
Just In




சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், இன்ஸ்டாகிராம் பிரபலமான குர்கானில் வசிக்கும் பாபி கட்டாரியா, விமான இருக்கையில் படுத்துக் கொண்டு சிகரெட்டைப் பற்றவைப்பதைக் காணலாம். இருக்கையில் கூலாக படுத்து கொண்டு அவர் புகை பிடிப்பதை வீடியோவில் பார்க்கலாம். இன்ஸடாகிராமில் 6.30 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவிடம் பலர் ட்விட்டரில் புகார் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த சிந்தியா, "இது போன்ற ஆபத்தான நடத்தையை சகித்து கொள்ள முடியாது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.
இது பழைய வீடியோ, இருப்பினும் இச்சம்பவத்தை கவனத்தில் கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமான போக்குவரத்துதுறை பாதுகாப்பு அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இச்சூழலில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது செயலை ஆதரித்து கட்டாரியா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சம்பவம் குறித்த செய்தி அறிக்கைகளின் ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டு, டி.ஆர்.பியை பெற முயற்சிப்பதற்காக ஊடகங்களை விமர்சித்துள்ளார். தனது பிரபலத்தின் மூலம் டிஆர்பியை பெற முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
"TRP மட்டுமே தேவை. அரசியல்வாதிகளை கலந்து கொள்ள வைத்து எதை வேண்டுமானாலும் பேசுங்கள்" என கட்டாரியா ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதைத் தவிர, விமான அறைக்குள் புகைபிடிப்பதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தியாவில் பயணிகள் விமானத்திற்குள் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவத்தில், உத்தரகாண்டின் சாலையின் நடுவில் மது அருந்தியதாகக் கூறி கட்டாரியா மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "2022 ஜனவரியில் இந்த வீடியோ தங்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது இந்த விஷயம் முழுமையாக விசாரிக்கப்பட்டு, குருகிராம் காவல்துறையிடம் விமான நிறுவனம் புகார் அளித்துள்ளது" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்