`இந்தியாவை இந்து ராஷ்ட்ரமாக மாற்றுவேன்’ என நாட்டின் பல்வேறு பகுதிகளில் சூளுரை எடுக்கப்படும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் சுதர்ஷன் நியூஸ் என்ற ஊடகத்தின் ஆசிரியர் சுரேஷ் சாவ்ஹன்கேவால் பகிரப்பட்டுள்ளது. 


கடந்த டிசம்பர் 29 அன்று, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்ட சுரேஷ் சாவ்ஹன்கே, அதில் உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் இந்தியாவை இந்து ராஷ்ட்ரமாக மாற்றுவதற்கு சூளுரைத்தது, அதற்காக `சண்டையிடுவது, உயிரை விடுவது, கொலை செய்வது’ ஆகியவற்றிற்குத் தயாராக இருப்பதாகக் கூறுவதைப் பகிர்ந்துள்ளார். 


கடந்த டிசம்பர் 28 அன்றும், சுதர்ஷன் நியூஸ் ஊடகத்தின் ட்விட்டர் தளத்தில் உத்தரப் பிரதேசத்தின் ருபைடிஹா பகுதியிலும், நாக்பூரிலும் இதுபோன்ற சூளுரை நிகழ்ச்சிகள் நடைபெற்ற வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. 


கடந்த டிசம்பர் 19 அன்று, டெல்லியில் ஹிந்து யுவ வாஹினி என்ற அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றிலும் இதுபோன்ற சூளுரை எடுக்கப்பட்டுள்ளதாக, கடந்த டிசம்பர் 22 அன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. 






`இந்தியாவை இந்து ராஷ்ட்ரமாக மாற்றுவதற்கும், இந்து ராஷ்ட்ரமாக வைத்துக் கொள்வதற்கும் பணியாற்ற சூளுரைக்கிறோம். இதற்காக நாங்கள் சண்டையிடுவோம்; உயிரைக் கொடுப்போம்; தேவைப்பட்டால் இதற்காக கொலையும் செய்வோம். ஆனால் எந்தக் காரணத்திற்காகவும், எந்தத் தியாகத்திற்காகவும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். நமது முன்னோர்கள், குருக்கள், இந்தியத் தாய் ஆகியோர் நமது சூளுரையை நிறைவேற்றுவதற்குப் போதிய பலத்தை நமக்குத் தரட்டும். அவர்கள் நம் வெற்றியை நமக்குத் தரட்டும்’ என்ற இந்த சூளுரை இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் எடுக்கப்பட்டுள்ளது. 


உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள நேரு பூங்கா பள்ளியின் மாணவர்களுக்கு இந்த சூளுரை வழங்கப்பட்டதோடு, இந்த நிகழ்ச்சி, `பாரத் மாதா கீ ஜெய்’, `வந்தே மாதரம்’, `ஜெய் ஹிந்த்’ முதலான முழக்கங்களுடன் முடிவடைந்தது. 



சுரேஷ் சாவ்ஹன்கே


 


தங்கள் பள்ளி சீருடைகளில் இருந்த மாணவர்கள் பள்ளி முடிவடைந்தது இந்தப் பூங்காவில் கூடியுள்ளதாக தோன்றுகிறது. இந்த நிகழ்ச்சியில் சில மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர். 


சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவியதையடுத்து, சோன்பத்ரா மாவட்ட காவல்துறை தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளனர். 


மற்றொரு வீடியோவில், இந்தியா நேபாளம் எல்லையில் உள்ள ருபைடிஹா கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 12 பேருக்கு இந்த சூளுரையை வழங்கியிருப்பது பதிவாகியுள்ளது. வேறொரு வீடியோவில் இதே சூளுரையை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பலர் முன்னிலையில் கூறுவதோடு, அதன் முடிவாக `பாரத் மாதா கீ ஜெய்’, `வந்தே மாதரம்’, `ஜெய் ஸ்ரீராம்’, `சத்ரபதி சிவாஜி மகாராஜ் கீ ஜெய்’ எனக் கூறுவது பதிவாகியுள்ளது.