கேரளம் மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் உள்ள துவாரபாலகா் சிலைகளின் கவசங்களுக்குத் தங்க முலாம் பூசும் செலவை பெங்களூரைச் சோ்ந்த உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவா் ஏற்றுக்கொண்டாா். பின்னா், அந்தப் பணிகளுக்காக கவசங்களை அவா் சென்னைக்கு கொண்டு வந்தாா். இந்நிலையில், அந்தக் கவசங்களில் சுமாா் 4 கிலோ தங்கம் குறைந்தது கண்டறியப்பட்டு சா்ச்சை ஏற்பட்டது. இதுமட்டுமின்றி துவாரபாலகா் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட அடிப்பீடங்கள் காணாமல் போனதாக உண்ணிகிருஷ்ணன் தெரிவித்த நிலையில், அவை அவரின் சகோதரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டன.
மாநிலத்தையே பரபரப்பில் ஆழ்த்திய இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து உண்ணிகிருஷ்ணன் போற்றி கைது செய்யப்பட்டாா். இந்த முறைகேடு தொடா்பாக ஆதாரங்களைத் திரட்டும் நோக்கில், சென்னை, கா்நாடக மாநிலம் பெங்களூரு, பல்லாரி ஆகிய இடங்களுக்கு உண்ணிகிருஷ்ணன் போற்றியை கேரள காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு அழைத்துச் சென்றது. அப்போது பெங்களூரில் உள்ள அவரின் இல்லம், சென்னையில் தங்கக் கவசங்களை செப்பனிட்டு புதிதாக தங்க முலாம் பூசும் பணியை ஏற்ற நிறுவனத்தின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. ஆதாரங்களை திரட்டும் பணி நிறைவடைந்ததைத் தொடா்ந்து, அந்தக் குழு உண்ணிகிருஷ்ணன் போற்றியை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கேரளம் அழைத்துச் சென்றது.
இதுமட்டுமின்றி விசாரணையில் துவாரபாலகா் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட அடிப்பீடங்கள் காணாமல் போனதாக உண்ணிகிருஷ்ணன் தெரிவித்த நிலையில், அவை அவரின் சகோதரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் மாநில காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழுவினா், சபரிமலை முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ் குமாரிடம் விசாரணை நடத்தினா். திருவனந்தபுரத்தில் உள்ள காவல் துறை குற்றப் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணையைத் தொடா்ந்து, அவா் கைது செய்யப்பட்டாா்.இந்த நடவடிக்கை குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், சபரிமலை செயல் அதிகாரியாக சுதீஷ் குமாா் இருந்தபோது துவாரபாலகா் சிலைகளின் கவசங்களை செப்பனிட்டு புதிதாக தங்க முலாம் பூசும் பணிக்காக உண்ணிகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவற்றைச் செப்பு கவசங்கள் என்று முறைகேடாக சுதீஷ் குமாா் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
இது அந்தச் சிலைகளில் இருந்து தங்க முலாமை அகற்றி உண்ணிகிருஷ்ணன் மோசடியில் ஈடுபட வழிவகுத்தது. அந்தக் கவசங்களை தங்க முலாம் பூசும் பணிக்காக உண்ணிகிருஷ்ணனிடம் ஒப்படைக்குமாறு திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்திடம் சுதீஷ்குமாா்தான் பரிந்துரைத்துள்ளாா். மேலும் நடைமுறைக்கு மாறாக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் திருவாபரணம் ஆணையா் இல்லாமல், சிலைகளில் இருந்து அந்தக் கவசங்கள் எடுக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது என்கின்றனர். ஏற்கெனவே இந்த மோசடி தொடா்பாக உண்ணிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை முன்னாள் நிா்வாக அதிகாரி பி.முராரி பாபு ஆகியோா் கைது செய்யப்பட்ட நிலையில், மூன்றாவதாக சுதீஷ்குமாா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க பத்தனம்திட்டாவில் உள்ள குற்றவியல் நீதித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.