பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டம்,  பாஸ்தியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாணவர்கள் குரு சரன் விஸ்வாஸ் மற்றும்  ஆஷிஷ். இவர்கள் இரண்டு பேரும் அந்த பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு பள்ளியின் சார்பில், பீகார் கிராமின் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. அந்த மாநில அரசு, பள்ளி மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு சீருடை மற்றும் கல்வி சார்ந்த பொருட்கள் வாங்குவதற்காக இந்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வருகிறது.


அந்த வகையில் பாஸ்தியா கிராமத்தை சேர்ந்தவர்கள் பணம் வந்து இருக்கிறதா?  என தெரிந்து கொள்ள இரண்டு மாணவர்கள் காத்து இருந்தனர். அப்போது இரவு ஒரு நாள், சிறுவர்களின் வங்கி கணக்கிற்கு, 900 கோடி ரூபாய் வந்துள்ளதாக குறுஞ்செய்தி வந்தது. இதனையடுத்து இரண்டு சிறுவர்களும் பொது சேவை மையத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு வங்கிக்கணக்கில் இருப்பு தொகையை இருவரும் தங்களது வங்கி கணக்குகளில் பார்த்த போது ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. 




அதாவதது மாணவர் ஆஷிஷ் வங்கிக் கணக்கில் 6 கோடியே 2 லட்சம் ரூபாயும்,  குரு சரண் வங்கி கணக்கில் 900 கோடி ரூபாயும்  இருந்தது. இதனையடுத்து அந்த வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க தடை விதித்து வங்கி மேலாளர் நடவடிக்கை எடுத்தார். மேலும் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டத் தொகை பள்ளி சீருடைகளுக்காக மாநில அரசு செலுத்திய தொகை எனத் தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக காவல் துறையினர்  இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


இது தொடர்பாக அந்த மாவட்டத்தின் ஆட்சியர்  உதயன் மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛இரண்டு பள்ளி மாணவர்களில் வங்கி கணக்கில் அதிகளவு பணம் பதிவு செய்யப்பட்ட செய்தி எனக்கு கிடைத்தது.  பணம் அனுப்பும் கணினி முறையில் சில பிரச்னைகள் இருந்துள்ளது. இதனை வங்கியின் மேலாளர் தெரிவித்தார்  இது தொடர்பாக விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்து இருக்கின்றனர்” என அவர் தெரிவித்து உள்ளார்.  




இரண்டு பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் தவறுதலாக பணம் செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை அந்த பகுதி மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. இதே போன்ற சம்பவம் பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்று இருக்கிறது.  பீகாரில் அடிக்கடி இது போன்ற சம்வங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.