மும்பை ஏர்போர்ட்டில், இன்று காலை முதலே கட்டுக்கடங்காத கூட்டம் கூடி வருவதனால் பல பயணிகள் தங்கள் விமானங்களை தவறவிட்டு, அலைக்கழிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த கூட்ட நெரிசல் வீடியோவாக வெளிவந்து வைரலாக பரவி கொண்டிருக்கிறது. பண்டிகை காலம் துவங்கிவிட்தாலும், இது நவராத்திரி விழா காலம் என்பதாலும் வடமாநிலங்களில் எங்கு பார்த்தாலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, விமான நிலையத்திலும் வழக்கத்தைவிட அதிக அளவு பயணிகள் குவிந்து கொண்டிருக்கிறார்கள். இன்றும் அதே போல மும்பை விமான நிலையத்தில் கூட்டம் பெருமளவு காணப்பட்டது. இன்று காலை முதலே ஏராளமான விமானப் பயணிகள் விமானம் ஏறுவதற்காக வந்த வண்ணம் உள்ளனர். ஒவ்வொரு மையத்திலும் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. 



பெரும்பாலான பயணிகள் முன்கூட்டியே வராமல் கடைசி நேரத்தில் வந்ததால் பாதுகாப்பு சோதனைகளுக்காக வரிசையில் நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டியதாகிவிடுகிறது. இதன் காரணமாக பலர் தங்களது விமானத்தில் குறிப்பிட்ட அந்த நேரத்தில் எற முடியாமல் தவறவிட்டனர். சோதனை செய்து உள்ளே அனுப்புவதற்கு அதிக நேரம் ஆவதால் பலர் விமானத்தை பிடிக்க முடியாமல் போனார்கள். ஆனால், இப்படி மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால்தான், விமான சேவை நிறுவனங்கள், செக்கிங் உள்ளிட்ட பணிகளை விரைவாக செய்து முடிக்க, பயணிகளை சில மணி நேரம் முன்கூட்டியே ஏர்போர்ட்டுக்குள் வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அப்படி முன்கூட்டியே சொல்லியும், விரைவாக வராமல் தாமதப்படுத்தியதால் தாங்கள் செல்ல வேண்டிய விமானங்களை தவறவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பயணிகள் பலர் கூட்டம் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு சோதனையை விரைவு படுத்த கோரினர்.



ஆனால், பயணிகளின் பாதுகாப்புக்கே எல்லாவற்றையும்விட முன்னுரிமை என்பதால், பாதுகாப்பு சோதனையில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என்று அதிகாரிகளும் கறாராக தெரிவித்துவிட்டனர். வழக்கமாக, பண்டிகை காலங்களில் ஏர்போர்ட்களில் கூட்டநெரிசல் அதிகமாக காணப்படும் என்றாலும், இந்த முறை சற்று அதிகம் என்கிறார்கள். மும்பையை தவிர, நாட்டின் பல நகரங்களில் உள்ள விமான நிலையங்களிலும் கூட்டம் அலைமோதுவதாகவே தகவல்கள் வருகின்றன. கொரோனா பரவல் கலக்கம் ஏதுமின்றி, கொரோனா விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் அலைமோதும் இந்த மக்கள் கூட்டமானது, வீடியோவாகவும் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. வரும் காலங்களில் பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால், கொரோனா விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று நேற்றைய தினம் மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் இந்தியச் செய்திகள்...