நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. நாட்டிலே அதிகபட்சமாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் நேற்று மட்டும் 68 ஆயிரத்து 631 நபர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.




இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவலின் இரண்டாம் அலை தாக்கம் அதிகளவில் பரவி வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்ட்ரா மாநிலத்தில்தான் கொரோனா பரவலின் தாக்கம் அதிகமாக  உள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதலில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய அம்மாநில அரசு, கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் தற்போது 15 நாள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.




மகாராஷ்ட்ராவில் நேற்று ஒரு நாள் மட்டும் 68 ஆயிரத்து 631 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் தலைநகரான மும்பையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 468 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் மகாராஷ்ட்ராவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 503 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மும்பையில் மட்டும் 53 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால். உயிரிழப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் உயிரிழப்பு விகதம் 1.58 சதவீதமாகவும், மும்பையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.18 சதவீதமாகவும் உள்ளது.




மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை தற்போது வரை 38 லட்சத்து 39 ஆயிரத்து 338 நபர்களாக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 6 லட்சத்து 70 ஆயிரத்து 388 நபர்களும், மும்பையில் மட்டும் 86 ஆயிரத்து 688 நபர்களும் சிகிச்சையில் உள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர் எண்ணிக்கை 31 லட்சத்து 6 ஆயிரத்து 828 ஆக உள்ளது. வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 75 ஆயிரத்து 518 ஆக உள்ளது.  


 மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 18-ந் தேதி வரை, 10 லட்சத்திற்கும்( ஒரு மில்லியன்) அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 5.93 லட்சம் நபர்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டதே, இதுவரை ஒரு மாதத்தில் அதிகபட்ச பாதிப்பாக அந்த மாநிலத்தில் இருந்தது.




இந்த நிலையில், பிற மாநிலத்தில் இருந்து வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பிற மாநில மக்கள் மகாராஷ்ட்ராவிற்குள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மகாராஷ்ட்ரா அரசு பிறப்பித்த உத்தரவில், கேரளம், கோவா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் கொரோனா தொற்று அபாயம் அதிகமுள்ள மாநிலங்களாக கண்டறியப்பட்டுள்ளது என்றும், இந்த மாநிலங்களில் இருந்து மகாராஷ்ட்ரா வரும் பயணிகள் கட்டாயம் ஆர்.டி.- பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாநிலங்களில் உருமாறிய கொரோனா பரவலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.