மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2016ம் ஆண்டு நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த அந்த அறிவிப்புக்கு பிறகு, புதிய 500 ரூபாய் நோட்டுகளையும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.


2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதா?


இச்சூழலில், கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாகவும் வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது.


2019ஆம் ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை பெருவாரியாக மத்திய அரசு நிறுத்திவிட்டதாலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டது. கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி நிலவரப்படி, இதுவரை 3.32 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு:


2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், அதனை மாற்றுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 7ஆம் தேதி வரை, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ளதால், மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய/மாற்றுவதற்கான தற்போதைய ஏற்பாட்டை அக்டோபர் 7 ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


புகார் அளிக்கலாம்:


வங்கிக் கிளையோ அல்லது வேறு எந்த நிறுவனமோ 2000 ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ள மறுக்கும் சூழ்நிலையை யாராவது சந்தித்தால், புகாரின் பெயரில் அதற்கான தகுந்த வழி கிடைக்கும். இதுபோன்ற சம்பவம் நடந்தால் தனிநபர்கள் அந்தந்த வங்கிகளுக்குச் சென்று புகார் அளிக்கலாம்.


30 நாட்களுக்குள் வங்கி பதிலளிக்கவில்லை என்றாலோ அல்லது வங்கியின் பதிலில் புகார்தாரர் அதிருப்தி அடைந்தாலோ, RBI போர்ட்டல் cms.rbi.org.in இல் புகாரைப் பதிவுசெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது குறித்து விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், "மக்கள் தங்கள் பணத்தைக் கோருவதற்கு அவசரப்பட வேண்டியதில்லை. திரும்பப் பெறுதல் நிதி ஸ்திரத்தன்மையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதால் பொருளாதாரத்தில் எந்த எதிர்மறையான தாக்கத்தையும் நான் காணவில்லை" என்றார்.


சில காலமாகவே மக்களின் செலவிடும் திறன் பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் முடிவால் நுகர்வோர் அதிக அளவில் செலவிடுவார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.