சகோதரத்துவம் பேணும் ரக்‌ஷாபந்தன் நாள் நாளை கொண்டாடப்படுகிறது. பல நேரங்களில் பல பண்டிகைகளை அதன் வரலாறும் சிறப்பும் தெரியாமலேயே கொண்டாடுகிறோம். அது பண்டிகைக்கான அறம் அல்ல. நாளை ஆகஸ்ட் 22 ரக்‌ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது. நம்மில் பலரிடமும் இதன் வரலாற்றைக் கேட்டால் இந்திப் படத்தில் கொண்டாடுவார்களே அதுதானே என்போம். ஆம் நாம் நினைப்பதுபோல் அது வடக்கே தான் மிகவும் பிரபலம். ஆனால் இப்போது எல்லைகள் கடந்து கொண்டாடப்படும் நாளாகிவிட்டது. ரக்‌ஷாபந்தன் நாளில், சகோதரி சகோதரரின் கையில் ஒரு கயிற்றைக் காட்டி அண்ணனுக்கு நீண்ட ஆயுள் தர இறைவனை வேண்டிக் கொள்வார்.


பதிலுக்கு, சகோதரன் வாக்குறுதியை அளிப்பார்ன். அந்த வாக்குறுதியில் காலம் முழுவதும் சகோதரியை அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விலக்கிக் காப்பேன் என்பார். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின்போது பரஸ்பரம் பரிசுப் பொருட்கள் பரிமாறிக் கொள்ளப்படும்.


இந்தப் பண்டிகை ஆண்டுதோறும் இந்துக்களின் காலண்டரின்படி ஷ்ரவன் மாதத்தில் பெளர்ணமி நன்னாளில் கொண்டாடப்படும். இந்த ஆண்டு இது நாளை ஆகஸ்ட் 22 கொண்டாடப்படுகிறது.


ராக்கி கட்ட நல்ல நேரம் இருக்கா?


நம் நாட்டில் எல்லாத்துக்கும் நல்ல நேரம் பார்க்கும் பழமையான பழக்கம் இருக்கிறது. ஷ்ரவன் மாதம் பெளர்ணமி நாளில் ரக்‌ஷாபந்தன் கொண்ட்டாடப்பட்டாலும் அந்த நாளில் எந்த நேரத்தில் ராக்கி கட்டலாம் எனப்தில் ஓர் ஐதீகம் கடைபிடிக்கப்படுகிறது. 


இந்துக்களின் பஞ்ஜாங்கத்தின் படி இன்று ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு 7 மணியளவில் தான் பெளர்ணமி திதி தொடங்குகிறது. நாளை 22 ஆம் தேதி மாலை 5.31 மணிக்கு இந்தத் திதி முடிவடைகிறது. பெளர்ணமி திதிக்குள் எப்போது வேண்டுமானாலும் ராக்கி கட்டலாம் என்பதே பொதுவான கருத்து. ஆனால், நாளை காலை 6.15 மணிக்குத் தொடங்கி, மாலை 5.31 மணி வரையிலும் எப்போது வேண்டுமானாலும் ராக்கி கட்டலாம் என்கிறது பஞ்சாங்க கணிப்பு.


ரக்‌ஷா பந்தன் வரலாறு:


ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் மகாபாரத புராணக் கதையுடன் தொடர்புடையது. கிருஷ்ண பரமாத்மா ஒருமுறை பட்டம் விடும்போது அவரது கைவிரலில் நூல் அறுத்துவிடுகிறது. அதனைப் பார்த்ததும் திரெளபதி தனது சேலை முகப்பைக் கிழித்து காயத்துக்குக் கட்டுப்போடுகிறார். அதனைப் பார்த்த கிருஷ்ண பரமாத்மா, நான் உன் வாழ்வின் கடினமான காலகட்டத்தில் உற்ற துணையாக இருப்பேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். திரெளபதி துயில் உரியப்பட்ட சம்பவத்தின்போது அவருடைய மானம் காக்கப்பட்ட சம்பவம் இதன் பிரதிபலனாக நடந்ததாகவே கூறப்படுகிறது.


ரக்‌ஷா பந்தன் நாளில் வீட்டில் இனிப்புகளை செய்வதும் குடும்பத்தினர் புத்தாடை அணிவதும் வடக்கே வழக்கமாக உள்ளது.