கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை (ஒற்றுமை யாத்திரை) காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்.7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்த யாத்திரையை தொடங்கினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் தேசிய கொடியைக் கொடுத்து யாத்திரையை தொடங்கி வைத்தார்.


இந்த யாத்திரை கிட்டத்தட்ட ஒரு மாத காலத்தை இன்று (அக்டோபர் 6) எட்டியுள்ளது. தற்போது ராகுல் காந்தி கர்நாடகாவில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அவர் யாத்திரையை தொடங்கினார். மைசூரு, மண்டியா, துமகூரு, சித்ரதுர்கா, பெல்லாரி, ரெய்ச்சூர் வழியாக தெலங்கானாவுக்கு ராகுல் காந்தி செல்கிறார். கர்நாடகாவில் 21 நாட்களில் 17 மாவட்டங்களில் 511 கிமீ தொலைவை கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். 


இந்த யாத்திரையின்போது மடாதிபதிகள், விவசாயிகள், மகளிர் அமைப்பினர், பட்டியலின மற்றும் பழங்குடி இன அமைப்பினர் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதனிடையே தசரா விழாவையொட்டி 2 நாட்கள் பாதயாத்திரைக்கு விடுமுறை அளித்து, அவர் ஓய்வு எடுத்தார். வரும் 19‍-ம் தேதி பெல்லாரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். அதில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டு நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் இன்று கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற யாத்திரையில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து சோனியா காந்தியும் சில கிலோ மீட்டர் தூரம் நடந்தார். அப்போது, சோனியா காந்தியின் ஷூ லேஸ் கழன்றதை அடுத்து, ராகுல் காந்தி எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக அதனைக் கட்டிவிட்டார். 


தரூர் பகிர்ந்த ட்வீட்:


இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ட்வீட்டில், ராகுல் காந்தி தனது தாய் சோனியாவுக்கு கால் ஷூ லேஸ் கட்டிவிடும் வீடியோவை பதிவு செய்துள்ளர். கூடவே அன்னையர் என்ன நேர்ந்தாலும் மாறுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.






11-வது நாளில் நடந்த சம்பவம்:
இந்திய ஒற்றுமை யாத்திரையின் 11வது நாளில் இது போன்ற சம்பவம் ஒன்று நடந்தது. நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுடன் ராகுல் காந்தி கேரளாவின் ஹரிபாடில் இருந்து நடை பயணத்தை தொடங்கினார்.
ரமேஷ் சென்னிதலா, கே. முரளீதரன், கொடிக்குன்னில் சுரேஷ், கே.சி.வேணுகோபால், கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்றைய நடைப்பயணத்தின் முதல் கட்டமான 13 கிலோமீட்டர் தூரத்தை ராகுல் காந்தியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.


சாலையின் இருபுறமும் காத்திருந்த மக்களை சந்திப்பதற்காக ராகுல் காந்தி, அவருக்காக போடப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்தை அவ்வப்போது மீறினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பிறகு, ராகுல் காந்தி அந்த வழியில் உள்ள ஒரு ஹோட்டலில் தேநீர் அருந்துவதற்காக ஓய்வு எடுத்தார். 




மக்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் வகையில், இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடைபயணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில், ஆலப்புழா மாவட்டம் அம்பலப்புழாவில் ஒரு சிறுமிக்கு ராகுல் காந்தி அவரது காலணிகளை அணிய உதவுவதைக் காணலாம். இச்சம்பவம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.