Rahul Gandhi: மத்திய அரசில் 9 லட்சத்து 64 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி சாடியுள்ளார்.


9.64 லட்சம் அரசுப் பணியிடங்கள்:


மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்கள் தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தேசத்தின் இளைஞர்களே ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள். வேலைவாய்ப்பு வழங்குவது பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம் அல்ல. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் இருப்பதோடு, மத்திய அரசில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாமலும் மெத்தனம் காட்டுகிறார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வழங்கிய தரவுகளின்படி, அரசின் 78 துறைகளில் 9 லட்சத்து 64 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் முக்கியமான துறைகளை பொறுத்தவரை, ரயில்வேயில் 2.93 லட்சம் பணியிடங்கள், உள்துறை அமைச்சகத்தில் 1.43 லட்சம், ராணுவ அமைச்சகத்தில் 2.64 லட்சம் பணியிடங்கள் காலியாகி உள்ளன.






”காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்”


15 மிகப்பெரிய துறைகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பது ஏன் என்ற கேள்விக்கு மத்திய அரசிடம் பதில் இருக்கிறதா? பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வரும் பிரதமரின் அலுவலகத்திலேயே ஏன் அதிக எண்ணிக்கையிலான மிக முக்கியமான பதவிகள் காலியாக உள்ளன? நிரந்தர பணிகளை வழங்குவதை ஒரு சுமையாக கருதும் பாஜக அரசு தொடர்ந்து ஒப்பந்த பணி முறையை ஊக்குவித்து வருகிறது. அவற்றில் பாதுகாப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. காலியான பணியிடங்களை பெறுவது நாட்டின் இளைஞர்களின் உரிமை. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு ஒரு வலிமையான திட்டத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இளைஞர்களுக்கு மூடப்பட்டிருக்கும் வேலைவாய்ப்புக்கான கதவுகளை திறப்பதே I.N.D.I.A. கூட்டணியின் உறுதிப்பாடு ஆகும். இளைஞர்களின் தலைவிதி, வேலையில்லா திண்டாட்டத்தின் இருளை அகற்றி சூரிய உதயத்தை காணும்" என்று ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


மத்திய அரசை சாடும் ராகுல் காந்தி:


மத்திய அரசின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை சுட்டிக் காட்சி, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தொடர்ந்து கடுமையாக சாடி வருகிறார். ஆண்டிற்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் தான், மோடியின் கியாரண்டி என்ற பெயரில் பிரதமர் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாகவும், தனது அலுவலகத்தில் உள்ள பணியிடங்களையே அவர் நிரப்பவில்லை என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.