இமாச்சல் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், 650க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டன.
பனி மழை:
இமயமலை தொடரின் அடிவாரத்தில் உள்ள இமாச்சல் பிரதேசத்தில் கடந்த 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு பொழிந்து வருகிறது. அதனுடன் மழையும் சேர்ந்து பொழிந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் 60 செ.மீ மேல் பனி பொழிந்து உள்ளது. இதனால் சாலைகள், மரங்கள் மற்றும் வீடுகளில் பனியானது படர்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக இடைவிடாத மழை மற்றும் பனியால் பல இடங்களில் பனிச்சரிவுகள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 650 க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சாலைகளில் வாகனங்கள் மிக நீண்ட தூரத்துக்கு அணி வகுத்து காத்திருப்பதை காணமுடிகிறது.
இமாச்சல் பிரதேச மாநிலம் கீலாங் பகுதியில் வசிக்கும் ஒருவர், தனது வீட்டின் மேலே பனி படர்ந்து இருப்பதை அகற்றுவதை காண முடிகிறது.
இந்த கடும் பனிபொழிவால் , இமாச்சல் பிரதேச மாநிலத்தில், சுற்றுலா பயணிகளின் வருகையானது குறைந்துள்ளது. மேலும் சில இடங்களில் வீடுகளும் பாதிப்புக்கு உள்ளாகின. இந்த பனிப் பொழிவானது, இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என கூறப்படுகிறது.