பீகாரில் அடுத்த கட்ட தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கிய ராகுல் காந்தி, இன்று நடந்த பேரணி ஒன்றில் மக்களிடையே உரையாற்றினார். அப்போது, ஏற்கனவே சில மாநிலங்களில் வாக்குகளை திருடி வென்ற பாஜக, பீகாரிலும் அந்த வழியிலேயே வெற்றி பெற முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். ஆனால், ஜென் Z தலைமுயினர் அதை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்துவார்கள் என்று அவர் கூறியுள்ளார். அவரது உரை குறித்து முழு விவரங்களை பார்க்கலாம்.
“மோடி, அமித் ஷா, தேர்தல் ஆணையம் இணைந்து அரியானா தேர்தலை திருடிவிட்டனர்“
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. இந்நிலையில், அடுத்த கட்ட வாக்குப்பதிவு வரும் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, இன்று பீகாரில் உள்ள பகல்பூரில் நடந்த தேர்தல் பேரணியில், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது மக்களிடையே பேசிய அவர், அரியானாவில் 2 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், வாக்குப் பட்டியலில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் போலியானவர்கள் என குறிப்பிட்டார். மேலும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து, அரியானா தேர்தலை திருடிவிட்டனர் என்பதை மக்களுக்கு உறுதியாக சொல்வதாக ராகுல் காந்தி கூறினார்.
“பீகாரில் வாக்குகளை திருட ஜென் Z விடமாட்டார்கள்“
அதோடு, மக்களவை தேர்தலில், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் அவர்கள் வாக்குகளை திருடியதாக ஆதாரங்களுடன் தாங்கள் கூறியதாக சுட்டிக்காட்டினார். அதேபோல், இப்போது அவர்கள் பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார். கடைசி தருணம் வரை எங்களுக்கு வாக்காளர் பட்டியல் கிடைக்கவில்லை என்று கூறிய ராகுல் காந்தி, பீகார் ஜென் Z இளைஞர்கள் இங்கு வாக்குத் திருட்டு நடக்க விடமாட்டார்கள் என்றும் கூறினார்.
மேலும், அதானி, அம்பானி போன்றவர்களுக்கு மக்களின் நிலத்தை வழங்கவும், மக்களுக்கான மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை தனியார் மயமாக்கவும் தான் இந்த வாக்கு திருட்டு நடத்தப்படுகிறது என்று அவர் கடுமையாக சாடினார். நிதிஷ் குமார், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், பீகார் மக்களை தொழிலாளிகளாக மட்டுமே வைத்துள்ளனர்" என்றும் ராகுல் காந்தி கூறினார்.
கடந்த புதன் கிழமையன்று, அரியானாவில் வாக்கு மோசடி குறித்த தரவுகளை, சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி வெளியிட்டார். இந்நிலையில், இந்த பேரணிக்கு செல்வதற்கு முன், இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தேர்தலை திருடி பிரதமரானவர் மோடி என்பதை, நாட்டின் ஜென் Z இளைஞர்களுக்கு தெளிவாக எடுத்துரைப்போம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.