மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் ஸ்ரீநகருக்கு விஜயம் மேற்கொண்டார். அப்போது காஷ்மிரி மாணவிகளுடன் கலந்துரையாடியாடினார். அதுகுறித்த வீடியோவை ராகுல்காந்தி  தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 


அதில் வரவிருக்கும் தேர்தல், ஜம்மு காஷ்மிரின் நிலை, பெண்களின் பாதுகாப்பு, ராகுல்காந்தியின் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் பேசினார். திருமணம் குறித்து மாணவிகளின் விளையாட்டுத்தனமான கேள்விகளுக்கு புன்னகையுடன் ராகுல்காந்தி பதிலளித்தார். 






திருமணம் செய்யும் ப்ளான் இருக்கா என்ற மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி, ”நான் 20-30 ஆண்டுகளாக அந்த அழுத்தத்தை தாண்டிவிட்டேன். திருமணம் செய்யும் திட்டம் ஏதுமில்லை. ஆனால் அது நடந்தால்...” என சிரித்துக்கொண்டே பதிலளித்தார். 


இதைக்கேட்ட மாணவிகள் ஒரே குரலில் திருமணத்திற்கான அழைப்பை விடுத்தனர்.  அதற்கு புன்னகையுடன் முற்றுப்புள்ளி வைத்தார். 


தொடர்ந்து விவாகரத்து விகிதம் குறித்தும் சமூக அழுத்தங்கள் குறித்தும் திருமணங்கள் பற்றிய அச்சத்தை மாணவிகள் பகிர்ந்து கொண்டனர். 


இந்த ஆண்டு மே மாதம் ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் ராகுல் காந்தியிடம் அவரது திருமணத் திட்டம் குறித்து கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் இருந்த ஒருவர், "எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்?" என்று கேட்டதற்கு, அந்தக் கூட்டத்தில், பிரியங்கா காந்தி அவரிடம் பதில் சொல்லச் சொன்னார். பதிலளித்த அவர், "இப்போது இல்லை” என்று கூறினார்.