ராகுல் காந்தி தனது டிவிட்டர் பயோவை மாற்றியதோடு, நாடாளுமன்றத்திற்கும் வருகை தந்து இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மீண்டும் எம்.பி., ஆன ராகுல் காந்தி:


ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை, கடந்த 5ம் தேதி உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனை தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்த நடவடிக்கையை திரும்பப் பெறுவதாக, மக்களவை செயலகம் அறிவித்தது. இதனால், 136 நாட்களுக்குப் பிறகு மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல் காந்தி.


ராகுல் ரீ-எண்ட்ரீ:


மக்களவை செயலகத்தின் அறிவிப்பை தொடர்ந்து ராகுல் காந்தி அடுத்தடுத்து அதிரடியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். முன்னதாக அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் என இருந்த தனது டிவிட்டர் பயோவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என மாற்றினார். இந்நிலையில், அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளதால், தனது டிவிட்டர் பயோவி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டுள்ளார்.






நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி:


டிவிட்டர் பயோவை மாற்றிய கையோடு அனைவரும் எதிர்பார்த்ததை போன்று, நாடாளுமன்றத்திற்கும் வருகை தந்தார் ராகுல் காந்தி. கட்சி எம்.பிக்களின் புடைசூழ நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியில் ராகுல் காந்தி வாழ்க என முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, சக எம்.பிக்களுடன் சேர்ந்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்திகுள் சென்றார். 


வழக்கின் விவரம்:


கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது கர்நாடகாவில் மோடி எனும் சமூகப் பெயரை இழிவுபடுத்தும் விதமாக, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாஜக எம்எல்ஏவும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி தொடர்ந்த வழக்கில்,  ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் ராகுல் காந்தி இழிவுபடுத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார்.  வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது அரசு இல்லத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.  தண்டனைக்கு ஆட்சேபம் தெரிவித்த ராகுல் காந்தி, சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகி, தனது தண்டனைக்கு தடை விதிக்கக் கோரினார். இது ஏப்ரல் 20 அன்று நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து, குஜராத் உயர்நீதிமன்றமும் ராகுல் காந்தியின் கோரிக்கையை கடந்த 7ம் தேதி தள்ளுபடி செய்தது. இறுதியாக உச்சநீதிமன்றத்த நாடியபோது தான், அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.