இந்திய அரசுடன் ரஃபேல் ரக போர் விமான வணிகத்தில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டு டாசால்ட் விமான உற்பத்தி நிறுவனம், 2007-12 கால கட்டங்களில் இடைத்தரகர் சுஷென் குப்தாவுக்கு பெருந்தொகையை கள்ளத்தனமாக வழங்கியுள்ளது.


ரஃபேல் ரக போர் விமான வர்த்தக முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் மீடியாபார்ட் புலனாய்வு பத்திரிக்கை  இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும், 2018ம் ஆண்டில் இந்த பெருந்தொகை கைமாறியது தொடர்பான ஆவணங்கள் சிபிஐக்கு கிடைக்கப்பெற்றும், இதுவரை எந்த விசாரணையையும் அது மேற் கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.   


என்ன நடக்கிறது? 


2010 ம் காலகட்டங்களில் இந்திய அரசின் உயர்பதவிகளில் இருக்கும் முக்கிய நபர்களுக்காக சோப்பர் வாகனங்கள் (VVIP chopper) வாங்கலில் நிகழ்ந்த ஊழல் குற்றச்சாட்டை (அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு) சிபிஐ விசாரித்து வருகிறது. 


இந்த வழக்கு தொடர்பாக, மொரிசியஸ் நாட்டில் செயல்படும் இன்டர்ஸ்டெல்லார் டெக்னாலஜிஸ் லிமிட்டெட் நிறுவனத் தலைவர் சுஷென் குப்தாவை (தற்போது, பெருந்தொகை செலுத்தப்பட்டதாக கூறப்படும் இடைத்தரகர்), 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 



அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு தொடர்பான விசாரணையின் போது, இந்திய புலனாய்வு அமைப்பின் கோரிக்கையின் பேரில் மொரிசியஸ் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் சுஷென் குப்தா தொடர்பான சில ஆவணங்களை அளித்தது. அதில், ரஃபேல் ரக போர் விமான வணிகத்தில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டு டாசால்ட் விமான உற்பத்தி நிறுவனம், 2007-12 கால கட்டங்களில் சுஷென் குப்தாவுக்கு  7.5 மில்லியன் யுரோ பெருந்தொகையை கள்ளத்தனமாக (false invoices) வழங்கியது சுட்டிக் காட்டப்பட்டிருகிறது. இந்த ஆவணங்கள் சிபிஐ-க்கு 2018, அக்டோபர் மாதம் 11ம் தேதி கிடைத்தும், மேற்கொண்டு விசாரணையை இந்திய புலானாய்வு அமைப்பு முடிக்கிவிடவில்லை என்று    மீடியாபார்ட் பத்திரிக்கை குற்றம் சாட்டியுள்ளது.   


 






 


இந்திய  ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதாக அறிவித்த பின்புதான், டாசால்ட் விமான நிறுவனம் இடைத்தரகரிடம் பேரம் பேசியதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.     


தொடரும் குற்றச்சாட்டு:


கடந்த ஏப்ரல் மாதம் மீடியாபார்ட் நிறுவனம் ரஃபேல் ரக போர் விமான முறைகேடு தொடர்பான ஆதாரங்கள் சிலவற்றையும் வெளியிட்டது. அதில், செப்டம்பர் 23, 2016 அன்று ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு, டஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவில் உள்ள அதன் துணை ஒப்பந்தக்கார நிறுவனங்களில் ஒன்றான Defsys Solutions ( தற்போது, குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் செஷன் குப்தாவின் இந்திய நிறுவனம் -டெஃப்சிஸ் சொல்யூஷன்ஸ்)- க்கு பெருந்தொகையை அளிக்க ஒப்புக் கொண்டது. 2018 அக்டோபர் மாத நடுப்பகுதியில், பிரெஞ்சு ஊழல் தடுப்பு முகமை இந்த பணப் பரிமாற்றத்தைக் கண்டறிந்து, டஸ்ஸால்ட்  நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.   



ரஃபேல் போர் விமானங்களின் 50 பிரதி மாதிரிகளை தயாரிக்கும் பொருத்து பணம் செலுத்தப்பட்டதாக டஸ்ஸால்ட் நிறுவனம் தனது பதிலில் தெரிவித்ததாகவும், ஆனால், அதற்கான ஆதராங்களை  நிறுவனத்தால் சமர்பிக்க முடியவில்லை என்று மீடியாபார்ட் விசாரணையில் தெரிவித்தது.  


ரஃபேல்  பின்னணி : 


ஜனவரி 31 ,2012ம் ஆண்டில் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது என்றும். இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்பத்தை டஸ்ஸால்ட் நிறுவனம் வழங்க இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் (ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. இதன்படி ஹெச்ஏஎல் – டஸ்ஸால்ட் இரு நிறுவனங்கள் இடையேயான வேலை ஒப்பந்தம் 2014 மார்ச்சில் கையெழுத்தானது. பின்பு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் தலைமை அமைச்சர் மோடி அவர்கள் முன்பு எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக அறிவித்து, 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர் முன்னிலையில் 2016 செப்டம்பரில் ரிலையன்ஸ்-டஸ்ஸால்ட் நிறுவனங்களுக்கிடையில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது.  


புதிய ஒப்பந்தத்தின் கீழ்,  இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல்- க்குப் பதிலாக எந்த அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனம் ஏன் சேர்க்கப்பட்டது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு , "ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை இந்தியக் கூட்டாளியாகத் தேர்வுசெய்ததில் முறைகேடு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.