கேரளாவை சேர்ந்த மாடல் அழகியும் அவரது தோழியும் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அன்று நடந்த விபத்தின் போது, காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் குடித்து விட்டு வாகனத்தை ஓட்டியுள்ளார். அவருக்கு எடுக்கப்பட்ட இரத்த பரிசோதனையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் அன்சி கபீர் மற்றும் இவரது தோழி அஞ்சனா ஷாஜன். இவர்கள் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற கேரள அழகிப்போட்டியில் பங்கேற்றனர். அதில் அன்சி கபீர் முதலிடமும், அஞ்சனா இரண்டாம் இடமும் பிடித்தனர். அதன் பிறகு நடந்த தென்னிந்திய அழகிப்போட்டியில் பங்கேற்ற அன்சி கபீர் அதிலும் மகுடம் சூடினார். அன்சி மற்றும் அஞ்சனா இருவரும் மாடலிங் துறையில் கலக்கி வந்த நிலையில் , தங்களது ஆண் நண்பர்களுடன் இணைந்து ஃபோட்டோ ஷூட் நடத்த திட்டமிட்டதாக தெரிகிறது.
அதன்படி தங்களுக்கு சொந்தமான ஃபோர்ட் ஃபிகோ என்னும் காரில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றனர். அப்போது நிலை தடுமாறிய கார் அங்குள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே அன்சி மற்றும் அஞ்சனா ஆகிய இருவருமே உயிரிழந்தனர். மேலும் உடன் இருந்த மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு , அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். முதற்கட்டமாக அங்குள்ள பொதுமக்களிடம் நடத்திய விசாரணையில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதாக தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் இந்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.