இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றுள்ள நிலையில், ரஃபேல் விவகாரம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி மீது, இந்த விவகாரத்தை முன்வைத்து நேரடியாக ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது காங்கிரஸ். 


கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து அவர் மீது நேரடியாக ஊழல் குற்றச்சாட்டு எதுவும் முன்வைக்காத நிலையில், ரஃபேல் விவகாரம் நேரடியாக பிரதமரை தொடர்புப்படுத்துவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரஃபேல் விவகாரம் என்றால் என்ன? பிரதமர் மோடி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்ன? தற்போது பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் சென்றிருக்கும் நிலையில், ரஃபேல் விவகாரம் விஸ்வரூபம் எடுக்க காரணம் என்ன? என்பதை கீழே காண்போம்.


ரஃபேல் விவகாரம் என்றால் என்ன?


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், இந்திய விமானப்படையை பலப்படுத்தும் நோக்கில் போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஏலத்தில் உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் கலந்து கொண்ட நிலையில், மற்றவற்றை காட்டிலும் குறைந்த விலைக்கு கேட்ட பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்கு இந்திய போர் விமானங்களை தயார் செய்யும் ஏலம் கிடைத்தது.


அதன்படி, 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து இந்திய அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், இந்த போர் விமானங்களை தயார் செய்யவிருந்தது. 


இதற்கிடையே, பாஜக, மத்தியில் ஆட்சி அமைத்தது. போர் விமானங்களின் விலை, உத்தரவாதம் தொடர்பாக இரு நாட்டு அரசுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால், அப்போதைய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், திடீரென, பேச்சுவார்த்தையில் பிரச்னை ஏற்பட்டதாகவும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ரஃபேல் போர் விமானங்களுக்கு பதில் கூடுதலாக சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களே போதுமானது என அறிவித்தார்.


பிரதமர் மோடிக்கும் ரஃபேல் விவகாரத்திற்கும் என்ன தொடர்பு?


இதை தொடர்ந்து, பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்த சூழலில், 
2015ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தபோது, பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட்டது. அதன்படி, 126 ரஃபேல் விமானங்களுக்கு பதில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 36 ரஃபேல் விமானங்களை வாங்க இரண்டு அரசுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டன.


இதற்காக, இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம், டசால்ட் ஏவியேஷன் இணைந்து போர் விமானங்களை தயாரிக்க ஒப்பு கொண்டது. 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்திய அரசு ரூ.59,000 கோடியில் ஒப்பந்தம் செய்தது.


126 விமானங்களுக்கு பதில், தயாரிக்கப்பட்டு ரெடியாக இருக்கும் 36 விமானங்களை வாங்க காரணம் என்ன? இந்திய அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு பதில் எந்த ஒரு அனுபவமும் இல்லாத அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்திற்கு வாய்ப்பு அளித்தது என பல்வேறு கேள்விகள் எழுந்தன.


அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது இந்திய அரசே என பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்ட் தெரிவித்தார். ஆனால், ரிலையன்ஸை தேர்வு செய்தது தங்களின் முடிவு என டசால்ட் நிறுவனம் விளக்கம் அளித்தது.


ரஃபேல் விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பப்பட்டது. ஆனால், மனுக்களை தள்ளுபடி செய்து இந்திய அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த வழக்கையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.


இதற்கிடையே, ரஃபேல் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனம் மீடியாபார்ட், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளிகொண்டு வந்தது. 


ஒப்பந்ததத்தை இறுதி செய்வதற்காக டசால்ட் நிறுவனம் பல கோடி யூரோ பணத்தை இந்திய இடைத்தரகர் ஒருவருக்கு அளித்தது என்பது பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்பு அமைப்பு மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என மீடியாபார்ட் செய்தி வெளியிட்டது. 59,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை செய்ய பிரான்ஸ் நாட்டு நீதிபதி உத்தரவிட்டார். தற்போது, பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றுள்ள நிலையில், ரஃபேல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.