பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் கொலை வழக்கில் ஃபதேஹாபாத்தைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில், கொலையாளிகள் பயன்படுத்திய கார் குறித்த சிசி டிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.


சித்து மூஸ் வாலாவை கொலை செய்ய ஆசாமிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கார் ஹரியானா மாநிலம், ஃபதேஹாபாத் மாவட்டத்தில் இருந்து பஞ்சாப்பின் மான்சாவுக்குள் நுழையும் இந்த சிசிடிவி காட்சிகள் பிரபல தனியார் செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது


 






சித்து மூஸ் வாலா கடந்த மே 29ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்படுவதற்கு நான்கு நாட்கள் முன்னர் (மே.25) இந்தக் கார் மான்சாவுக்கு வந்துள்ளது இந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. 


பொறுப்பேற்ற கொலையாளிகள் கும்பல்?


28 வயது நிரம்பிய மூஸ்வாலா உடல் முன்னதாக உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில், அவரது உடலில் 25 புல்லட்டுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது உடல் முழுவதும் கன் பவுடர் இருந்ததாகவும் உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


சித்து மூஸ் வாலா கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் என்பவரது கும்பல் முன்னதாக இக்கொலைக்கு பொறுப்பேற்றதாகக் கூறப்படுகிறது.


பழிவாங்கல் நடவடிக்கை


 






தொடர்ந்து கைது செய்யப்பட்டு டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் காவலில் உள்ளார் பிஷ்னோய். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அகாலி தளம் கட்சியின் இளைஞரணித் தலைவர் விக்ரம்ஜித் சிங் என்ற விக்கி மிட்டுகேராவைக் கொன்றதில் மூஸ் வாலாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், சித்துவின் கொலை அதற்கான பழிவாங்கல் நடவடிக்கையே என்றும் பிஷ்னோய் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


பஞ்சாப் பாடகரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான சித்து மூஸ்வாலா, தன் பாடல்களில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வரிகளால் பெரிதும் பேசப்பட்டவர்.


பாடகர் டூ அரசியல்வாதி


பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இணைந்த பிரபல சித்து மூஸ்வாலா, மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து அவர் இறந்த செய்தியை மான்சா மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் ரஞ்சீத் ராய் உறுதிப்படுத்தினார்.


முன்னதாக, சித்து மூஸ்வாலா உட்பட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தேராஸின் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உட்பட 420 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெறுமாறு நேற்றுமுன்தினம் பஞ்சாப் காவல்துறை உத்தரவிட்டது. பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்ட ஒருநாள் கழித்து சித்து மூஸ்வாலா சுட்டு கொல்லப்பட்டுள்ளார். 


இந்நிலையில், இந்த அனைவருக்கும் வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் பாதுகாப்பு வழங்கப்படும் அம்மாநில அரசு முன்னதாக பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


இறுதிச்சடங்கு


 






மேலும் சித்து மூஸ் வாலாவின் மறைவு குறித்து விரிவான விசாரணைக்கு முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் சண்டிகர் நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதி தலைமையிலான விசாரணைக் கமிஷன் அமைத்தும் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.


இந்தச் சூழலில், சித்து மூஸ்வாலின் இறுதிச் சடங்கு இன்று அவரது சொந்த கிராமத்தில் நடைபெற்றது. இந்த இறுதி நிகழ்ச்சியில் அவரது ரசிகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மூஸா எனும் கிராமத்தில் உள்ள சித்துவின் விவசாய நிலத்தில் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்த அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.