கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடைசியாக புனீத் நடிப்பில் சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கத்தில் யுவரத்னா என்ற திரைப்படம் வெளியானது. ஏப்ரல் 1, 2021ல் இத்திரைப்படம் வெளியானது. இதில் சாயிஷா, தனஞ்சய் ஆகியோர் நடித்திருந்தினர். இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது. அதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் ஜேம்ஸ், த்வித்வா ஆகியன திரைக்கு வரவிருக்கின்றன. இந்நிலையில் தான் புனீத் ராஜ்குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


புனீத்துக்கு மாரடைப்பா?


புனீத் ராஜ்குமார் அன்றாடம் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது வழக்கம். அதேபோல், இன்று காலை ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபோது தனக்கு அசவுகரியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து பெங்களூரூவில் இருக்கும் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். புனீத் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியிருக்கிறது. மருத்துவமனை தரப்பிலிருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.


கார், பைக் ஆர்வலர்..


புனீத் ராஜ்குமார் கார் மற்றும் பைக் ஆர்வலர். விதவிதமான பைக்குகளையும், வெளிநாட்டுக் கார்களை வாங்கி அதை ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுவார். யுவரத்னா திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாக அவர் வெளிநாட்டுக் காரில் தனது நண்பர்களுடன் ஃப்ரெண்ட்ஷிப் தினத்தைக் கொண்டாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருந்தார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 1.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.


மருத்துவமனை குவிந்த ரசிகர்கள்:


புனீத் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ள நிலையில் பெங்களூரூ விக்ரம் மருத்துவமனை முன்னாள் பெருமளவில் அவரது ரசிகர்கள் திரண்டுள்ளனர். அங்கே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். செய்தி ஊடகவியலாளர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். அவரின் உடல்நிலை குறித்து விக்ரம் மருத்துவமனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட அனைவரும் காத்திருக்கின்றனர். ரசிகர்களால் அப்பு என்று அன்புடன் அழைக்கப்படும் புனீத் ராஜ்குமார் உடல் நலம் தேற வேண்டி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்துச் செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.




முன்னதாக இன்று காலை 7.30 மணியளவில் புனீத் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய சகோதரர் சிவாவின் புதிய படம் பஜ்ரங்கி 2 வெளியீட்டுக்காக வாழ்த்து தெரிவித்திருந்தார்.


கவலைக்கிடம் என தகவல்!


இது குறித்து மருத்துவமனையின் ஐசியு மருத்துவர் ரங்கநாத் நாயக் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடன், நடிகர் புனீத் குமார் நெஞ்சுவலி காரணமாக இன்று காலை 11.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. மருத்துவமனைக்குக் கொண்டுவரும்போதே அவரது நிலைமை மோசமாக இருந்ததார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது எனக் கூறியுள்ளார்.