Pune Porsche Crash: புனேவில் சொகுசு கார் மோதி 2 பேர் பலியான சம்பவம் தொடர்பான விசாரணையில், அடுத்தடுத்து வெளியாகும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன.


விபத்தை ஏற்படுத்திய சிறுவன்?


கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புனேவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் குடித்துவிட்டு மதுபோதையில்,  தனது தந்தையின் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான போர்ஷே சூப்பர் காரை ஓட்டிச் சென்றுள்ளான். அப்போது அதிவேகமாக சென்ற கார், சாலையோரம் சென்றுகொண்டிருந்த இருவர் மீது மோத அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காரை ஓட்டியதாக கூறப்படும் சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் பிணை வழங்கப்பட்ட சம்பவம் மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மீண்டும் அந்த சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை விஷால் அகர்வாலும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.


தாமதமாகிய பரிசோதனைகள்:


விபத்தை ஏற்படுத்திய சிறுவன் புனேவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தை நடத்தும் பெரும் பணக்காரரின் மகன் ஆவார். இதனால், போலீசார் அவருக்கு சாதகமாக செயல்படுவதாகவும், உதாரணமாக விபத்து ஏற்படுத்தியவர்களின் உடலில் இருந்த, ஆல்காஹிலின் அளவை கணக்கிடுவதற்கான சோதனையை உடனடியாக நடத்தாமல் தாமதப்படுத்ததியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு விபத்து ஏற்படுத்தியவர்களை விட, பலியான அனிஷ் அவாதியா, அஷ்வினி கோஷ்தா ஆகியோர் தொடர்பாக விசாரணை நடத்தவே அதிக கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய ஏர்வாடா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசாரிடமும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  


பீட்சா, பர்கர் வாங்கி தந்த காவலர்கள்:


விபத்து தொடர்பாக முதலில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன், மிகவும் பத்திரமாக கையாளப்பட்டதாக வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அந்த சிறுவனுக்கு பீட்சா மற்றும் பர்கர் வாங்கிக் கொடுத்து கவனமாக பார்த்துக் கொண்டதோடு, 8 மணி நேரம் கழித்தே போதை அளவு பரிசோதனை மேற்கொள்ளப்படதாகவும் அக்கட்சி சாடியுள்ளது. இதுதொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.


ஓட்டுனர் மீது பழியா?


விபத்து நடந்தபோது போர்ஷே காரை ஓட்டியது தங்களது ஓட்டுனர் தான் என,  சிறுவன் மற்றும் அவரது தந்தையான விஷால் அகர்வால் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதைதொடர்ந்து, அவரது மொபைல் போன் மீட்கப்பட்டுள்ளது மற்றும் விபத்து பற்றிய விவரங்களை வெளிக்கொணரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக 17 வயது சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வாலிடமும் புனே குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது . விபத்து நடந்த நாளில் அவரது மகன் மற்றும் பேரனிடம், அவர் மேற்கொண்ட உரையாடல்களைப் பற்றி அறியும் நோக்கிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சுரேந்திர அகர்வாலிற்கு பிரபல தாதா, சோட்டா ராஜனுடன் தொடர்புடையவர் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.