கடந்த ஆண்டு பரவிய கொரோனா முதல் அலையை காட்டிலும் தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நாடு முழுவதம் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெற்ற அதே நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி புதுவைக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அந்த மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.




மொத்தம் 30 தொகுதியை உள்ளடக்கிய புதுச்சேரியில் பெரும்பான்மையான இடங்களை என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து, அந்த மாநிலத்தின் முதல்-அமைச்சராக என்.ஆர்.ரங்கசாமி கடந்த 6-ஆம் தேதி பதவியேற்றார். இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன்காரணமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த 9-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


இந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்து மீண்ட புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு திரும்பினார். கார் மூலமாகவே சென்னையில் இருந்து புதுவை சென்ற அவருக்கு, தமிழகம் – புதுவை எல்லையில் அவரது கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், முதல்வர் ரங்கசாமி தனது வீட்டிலே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.




புதுவை மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மட்டுமே பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளார். தேர்தலில் வெற்றிபெற்ற பிற எம்.எல்.ஏ.க்கள் யாரும் இதுவரை பதவியேற்கவில்லை. மேலும், என்.ஆர்.காங்கிரஸ்., பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளதால் அமைச்சர்கள் பட்டியலும் இதுவரை தயாராகவில்லை. தற்போதுவரை அந்த மாநிலத்தின் கொரோனா தடுப்புப்பணிகளை மாநில ஆளுநரான தமிழிசை சவுந்திரராஜன் கண்காணித்து வருகிறார். இதனால், விரைவில் அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெற்று, நிவாரண உதவிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.