நாடாளுமன்ற மாநிலங்களவையின் நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பி.டி.உஷா  தனது ரயில்வே பணியிலிருந்து விலகியுள்ளார். 


கலை, அறிவியல், விளையாட்டு,பொருளாதாரம், இலக்கியம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை மாநிலங்களவைக்கு நியமன உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் நியமிப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டுக்கான உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களில் பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷாவும் ஒருவர்.




இதுகுறித்து பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ”பி.டி.உஷா ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகம். விளையாட்டுகளில் அவரது சாதனைகள் பரவலாக அறியப்படுகின்றன, ஆனால் கடந்த பல ஆண்டுகளாக வளரும் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியாக அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. அவர் ராஜ்யசபாவிற்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருந்தார். 


இதனிடையே மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும்,இது விளையாட்டுக்கு கிடைத்த கௌரவம் எனவும் பி.டி.உஷா தெரிவித்திருந்தார். மேலும்  நாடாளுமன்றத்தில் விளையாட்டுக்காக குரல் எழுப்புவேன் என்று அவர் கூறியிருந்தார்.


கடவுளின்சொந்த பூமி எனப்படும் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பயோலி கிராமத்தில் 1964ல் பிறந்தவர் உஷா. தந்து குழந்தைப் பருவம் முதலே விளையாட்டுகளில் ஆர்வமாக இருந்த இவர். மாநில அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில், பங்கு பெற்று வெற்றிகளை தன் வசமாக்கிவந்தார். 


1976ல் கேரள அரசு பெண்களுக்காக தொடங்கிய விளையாட்டுப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து தீவிரமாக பயிற்சி செய்தார். பின்னர், 1979ல் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் (100 மீட்டர்) முதல் பதக்கம் வென்றார். இங்கு தேசிய அளவில் கவனம் ஈர்த்த இவருக்கு 1980ல்  மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்குபெற்றார்.  அப்போது உஷாவின் வயது 16. தனது முதல் ஒலிம்பிக்கில் சோடை போயிருந்தாலும், அவர் சோர்ந்து போகவில்லை. அதன் பின்னர் நடைபெற்ற சர்வதேச போட்டிகள், ஆசிய தடகளப் போடிகள் என அவர் பங்கு பெற்ற அனைத்து போட்டிகளிலும் பதக்கங்களை வென்று குவித்தார். 


1988 ஒலிம்பிக்கில் பதக்கத்தினை இழந்த அவர், 1989ல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப்போட்டியில், 4 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசாத்தியப் படுத்தினார். உஷா தற்போது கேரளாவில் தடகள பயிற்சிப்பள்ளியினை நடத்திவருகிறார். மேலும் தனது மாணவர்களுக்கு அவர் கூறுவது, தோல்விக்கும்  வெற்றிக்கும் இடைப்பட்ட காலத்தில் புறக்கணிப்பும், வலியையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்ற அறிவுரையினை எப்போதும் வழங்கிவருகிறார். உஷா மொத்தம் 103 சர்வதேச பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லமுடியாமல் போனாலும் இந்தியாவின் தங்க மகள் என்றால் அது பி.டி. உஷா தான்.


உஷாவுக்கு கோழிக்கோடு பல்கலைகழகம் கவுரவ டாக்டர் பதக்கம் வழங்கியுள்ளது. மேலும் இந்திய அரசு  1983-ஆம் ஆண்டு அர்ஜுனா விருதும், 1985-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் அளித்து கௌரவித்தது. இந்நிலையில் தற்போது இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி வரும் பி.டி.உஷா நியமன எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் பணி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண