நீட் தேர்வு காரணமாக ஓசூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


’எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு’ என தன் தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒசூர் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


மாணவர் முரளி கிருஷ்ணா


ஒசூர், அரசனட்டி, சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி, இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோகன சுந்தரி, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மூத்த மகன் முரளி கிருஷ்ணா (18), கடந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார்


அதனைத்தொடர்ந்து நீட் எக்ஸாம் போட்டி தேர்வுக்காக தேர்வு எழுதிவந்துள்ளார்  முரளி கிருஷ்ணா. ஆனால் 160 மதிப்பெண்கள் எடுத்து அவர் நீட் போட்டித் தேர்வில் கடந்த ஆண்டு தோல்வியுற்றார். இதனையடுத்து மாணவர் முரளி கிருஷ்ணா இந்த ஆண்டும் நீட் போட்டித் தேர்வை எழுதுவதற்காக வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்பின் மூலம் படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 


கைப்பற்றப்பட்ட கடிதம்


இந்த நிலையில் மாலை வீட்டுக்குச் சென்ற முரளி கிருஷ்ணா தனது வீட்டில் தன் அறைக்குச் சென்று கதவை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அறையினுள் சென்று பார்த்தபோது முரளி கிருஷ்ணா தூக்கிட்டுத் தொங்கியது தெரியவந்தது.


தொடர்ந்து அவரை உடனடியாக மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஓசூர் சிப்காட் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மாணவர் முரளி கிருஷ்ணா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.


’நீட் எக்ஸாம் கஷ்டமா இருக்கு’


அந்தக் கடிதத்தில், ”எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்குமா, என்னால நீட்ல நல்ல மார்க் ஸ்கோர் பண்ண முடியல, என்ன மன்னிச்சிருமா... நான் என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணினேன், ஆனா மெடிக்கல் சீட் வாங்கற அளவுக்கு என்னால ஸ்கோர் பண்ண முடியாது.


நான் இந்த முடிவை எடுத்ததுக்கு என்ன மன்னிச்சிடுமா, நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேம்மா” என தனது தாய்க்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.


இதனையடுத்து மாணவர் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060