இந்திய  விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ சார்பில், பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக் கோள் இந்த ஆண்டில் ஏவப்படும் 5வது செயற்கைகோள் ஆகும். மேலும், இந்த ஆண்டில் செலுத்தப்படும் கடைசி ராக்கெட் இதுவாகும்.


ஏற்கனவே, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவும், அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் வளர்சி கண்டு வருகிறது. அண்மையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் துறை ராக்கெட்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், 'பிராரம்ப்(PRARAMBH)' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, விக்ரம்-எஸ் ராக்கெட் வெற்றிகரமாக கடந்த நவம்பர் 18ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.  ஐதராபாத்தை சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் அந்த ராக்கெட்டை வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 






பிஎஸ்எல்வி ராக்கெட்:


தனியார் பங்களிப்பின் முதல் முயற்சியே வெற்றி பெற்ற நிலையில், பிஎஸ்எல்வி சி-54 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தொடங்கியது. பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் இந்த 56வது பயணம்,  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து வரும் 26-ம் தேதி காலை 11.56 மணிக்கு தொடங்க உள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மொத்தம் நான்கு நிலைகளை கொண்டுள்ள இந்த ராக்கெட்டில், முதல் மற்றும் மூன்றாவது உந்து நிலைகளில் திட எரிபொருளும், இரண்டு மற்றும் நான்காவது நிலைகளில் திரவ உந்துசக்தியும் பயன்படுத்தப்படுகிறது.






செயற்கைகோள்களின் விவரங்கள்:

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் இந்தியாவின் 960 கிலோ எடைகொண்ட, 'ஓசன்சாட்03' என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் உடன் 8 நானோ செயற்கைக்கோள்களையும்  சுமந்து செல்ல உள்ளது. அவற்றில்  அமெரிக்க நாட்டின் ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைக்கோள்கள் மட்டும் நான்கு அடங்கும்.


அதோடு, தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் ஆனந்த் ஆகிய செயற்கைக்கோள்களை, இஸ்ரோ மற்றும் பூடானை சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதோடு, சுவிட்சார்லாந்தின் ஒரு செயற்கைக்கோளும் புவியின் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பப்பட உள்ளது.