டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியது விளையாட்டு உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.


பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வீரர்கள், வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மது அருந்திய காவல்துறை அதிகாரிகள் சிலர், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 


போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் மீது தாக்குதலா?


போராட்டம் நடத்தப்பட்டு வரும் இடத்தில் கடும் குளிர் வீசி வருவதால் படுக்கையை எடுத்து வந்ததாகவும் அப்போது தங்கள் மீது காவல்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாக மல்யுத்த வீரர்கள் புகார் கூறியுள்ளனர். பெரும்பாலான மல்யுத்த வீரர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் ஒருவர் சுயநினைவின்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து காவல்துறை தரப்பு அளித்த விளக்கத்தில், "ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி அனுமதியின்றி மடிந்த படுக்கைகளுடன் போராட்ட இடத்திற்கு வந்தார். போலீசார் தலையிட்டபோது, ​​ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, எம்எல்ஏவும் வேறு இருவரும் கைது செய்யப்பட்டனர்.


இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், குடிபோதையில் உள்ள போலீஸ்காரர்கள்  தங்களை தாக்கியதாக மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டுவதைக் கேட்கலாம்.


மது அருந்தி அட்டகாசத்தில் ஈடுபட்டனரா காவல்துறை அதிகாரிகள்?


"குடிபோதையில் உள்ள தர்மேந்திரா என்ற போலீஸ்காரர், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை தாக்கி எங்களுடன் கைகலப்பில் ஈடுபட்டார்" என முன்னாள் மல்யுத்த வீரர் ராஜ்வீர் தெரிவித்துள்ளார். தன்னுடைய தம்பி துஷ்யந்த் போகத்தின் தலையை அடித்து உடைத்ததாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கீதா போகட் குற்றம்சாட்டியுள்ளார்.


போராட்டம் நடைபெற்றும் வரும் இடத்தில் மயங்கி விழுந்த வினேஷ் போகத், "இப்படி நடத்தப்படுவதற்கு நாங்கள் குற்றவாளிகள் அல்ல. நீங்கள் எங்களைக் கொல்ல விரும்பினால், எங்களைக் கொல்லுங்கள்" என சொன்னபடி கதறி அழுதார்.


சில போலீசார் குடிபோதையில் இருந்ததாக எழுந்த புகாரை டெல்லி போலீசார் நிராகரித்துள்ளனர். போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த படையையும் பயன்படுத்தவில்லை என்றும், மோதலில் 5 போலீசார் காயம் அடைந்ததாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.


மோதலைத் தொடர்ந்து, போராட்டம் நடந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், அப்பகுதி முழுவதும் தடுப்புகள் போடப்பட்டு, ஊடகவியலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களை அணுக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.