பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (100) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் அகமதாபாத்தில் உள்ள ஐநா மேத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தாயின் மரணம் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட செய்தியை எழுதியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு வாழ்ந்து கடவுளின் காலடியை அடைந்துள்ளார். ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்ம யோகியின் அடையாளம் மற்றும் மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு இந்த மும்மூர்த்திகளை என் தாயிடம் நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.


உடல்நலக்குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரதமரின் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயை சந்தித்தார். குஜராத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 4 ஆம் தேதி, காந்திநகரில் உள்ள தனது தாயாரின் இல்லத்திற்குச் சென்ற மோடி, அங்கு தேர்தலுக்கு முன் ஆசி பெற்றார். 


முன்னதாக, ஜூன் 18 ஆம் தேதி ஹீராபெனின் 100வது பிறந்தநாளில் பிரதமருடன் நேரத்தை செலவிட்டார். 


தலைவர்கள் இரங்கல்:


குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் ஆகியோர் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கள் தெரிவித்து வருகின்றனர். 


முதலமைச்சர் முக ஸ்டாலின்:


உங்கள் அன்புக்குரிய தாய் ஹிராபாவுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம். தாயை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது. நான் மிகவும் வருந்துகிறேன், உங்கள் இழப்புக்காக நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 






துயரத்தின் இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அம்மாவுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளில் நீங்கள் அமைதியையும் ஆறுதலையும் பெறுவீர்கள்.


தமிழக ஆளுநர் ரவி:


பிரதமரின் தாயார் மறைவு மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு; அவரது ஆன்மா சாந்தியடையட்டும். 


புதுச்சேரி ஆளுநர் தமிழிசை:


பிரதமர் மோடியில் தாயார் கடவுளின் பாத கமலத்தை சென்றடைந்தார். 


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை:






பாரத பிரதமரின் அன்னையின் மறைவு செய்தி இதயத்தில் பேரிடியாக இறங்கியது.