காசி தமிழ் சங்கமம் 2022: உத்திர பிரதேசம் வாரணாசியில் இன்று நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடக்கும் இந்த நிகழ்வுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து பல குழுக்களாக பாரம்பரிய கலைஞர்கள் உத்தரபிரதேசம் சென்றுள்ளனர்.  பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் இந்த கொண்டாட்ட விழா நடைபெறவுள்ளது. இதனால் பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இந்த கொண்டாட்ட நிகழ்வு குறித்து ஏற்கனவே பதிவுகள் இட்டிருந்தனர். இந்த கொண்டாட்ட நிகழ்வு ஒரு மாத காலத்திற்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 


முன்னதாக நவம்பர் 12-ஆம் தேதி தமிழ்நாட்டு வருகைதந்த பிரதமர் மோடி,  காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க தனது தொகுதியான வாரணாசிக்கு வருகை தரும் முதல் குழுவை வரவேற்கத்தான் அங்கே இருப்பேன் எனத் தெரிவித்திருந்தார்.


மேலும் பிரதமராகவும், வாரணாசி எம்பியாகவும் அங்கிருந்து அவர்களை வரவேற்று தமிழ்நாடு கலாச்சாரத்தை பறைசாற்றக்கூடிய அனைத்து விஷயங்களையும் தான் கண்டுகளிக்கப்போவதாகவும், காசி மக்களுக்கு இது குறித்து எடுத்துச் சொல்லப் போவதில் தான் பெருமையடைவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.



பிரதமர் மோடி


 


அதேபோல், தமிழ்நாட்டுக்கு முன்னதாக வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, உலகத்தின் தொன்மையான, பழமையான மொழி நம் தாய் மொழி தமிழ்தான். தமிழின் தொன்மையை பறைசாற்றுவது தமிழர்களின் கடமை அல்ல, இந்தியர்களின் கடமை” எனத் தெரிவித்திருந்தார்.


சமீப காலமாக தமிழ் மொழி குறித்த பரப்புரையில் பாஜகவினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில்,  இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்வு பாஜகவின் அரசியல் பிரச்சாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், நவீன கண்டுபிடிப்புகள் வர்த்தகம் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்குகள், விவாதங்கள், விரிவுரைகள் போன்றவை இந்த நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது.



உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்


 


இந்த நிகழ்வின் ஏற்பாடுகளைச் செய்து வரும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்து கூறுகையில், 


தமிழ் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் மருமகன் கே.வி.கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. காசியின் முக்கிய இடமான அனுமன் படித்துறையில் அமைந்துள்ள உள்ள பாரதியின் வீடு,  கற்றல் மற்றும் புனித யாத்திரையின் மையமாக உள்ளது என்றார். மேலும் அவர் சமூக நீதி மற்றும் பெண் விடுதலை தொடர்பான பாரதியின் கவிதைகள் இன்றும் தேவையாக உள்ளது. வாரணாசியில் உள்ள காசியில்தான் பாரதிக்கு ஆன்மிகம் மற்றும் தேசியத்தின் மீதான நாட்டம் ஏற்பட்டது. அவர் தனது வாழ்நாளை தேசியத்திற்காகவே அர்ப்பணித்தார் என்றும் தர்மேந்திர பிரதான் கூறினார்.


வழி அனுப்பிய ஆளுநர்


இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலை, யோகா, ஆயுர்வேதம் சார்ந்த கலாச்சார வல்லுநர்கள், தொழில் முனைவோர், தங்கும் விடுதி உரிமையாளர்கள், கைவினைஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வலைப்பதிவர்கள் இந்த சங்கமத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காசிக்கு செல்லும் முதல் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களுடன் கலந்துரையாடி, அவர்களை வழி அனுப்பி வைத்தார்.


சிறப்பு ரயில்கள்


இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து கலைஞர்கள் காசிக்கு செல்ல இருக்கிறார்கள். இவர்கள் வசதிக்காக நவம்பர் 16, 23, 30 டிசம்பர் 7 மற்றும் 14 ஆகிய நாட்களில் ராமேஸ்வரம் - பனாரஸ் விரைவு ரயிலில் (22535) 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.


மறு மார்க்கத்தில் நவம்பர் 27 டிசம்பர் 4, 11 மற்றும் 18 ஆகிய நாட்களில் பனாரஸ் - ராமேஸ்வரம் விரைவு ரயிலில் (22536) 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. 


இதே போல சென்னை, கோயம்புத்தூர் கலைஞர்களின் வசதிக்காக எர்ணாகுளம் - பாட்னா விரைவு ரயில், டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கயா விரைவு ரயில், பாடலிபுத்திரம் - பெங்களூர் விரைவு ரயில் ஆகியவற்றில் முறையே 3 குளிர்சாதன மூன்றெழுத்து படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.