பிரதமர் நரேந்திர மோடி அனைத்து கட்சிகளின் அரசியல் தலைமைகளையும் அடிக்கடி சந்திக்க வேண்டும் என முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார். மோடி கையாண்டு வரும் வழிமுறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டிருக்கும் சில தவறான புரிதல்களை அகற்ற இது உதவலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.


பிரதமரின் உரைகள் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வெங்கையா நாயுடு, சுகாதாரம், வெளியுறவுக் கொள்கை, தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைத்ததற்காக மோடியை பாராட்டினார். மேலும், இந்தியாவின் எழுச்சியை உலகம் இப்போது அங்கீகரித்து வருவதாக கூறினார்.


'சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் - பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார் (மே 2019 - மே 2020)' என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழாவில் பேசிய வெங்கையா, "இந்தியா இப்போது ஒரு சக்தியாக உள்ளது. அதன் குரல் இப்போது உலகம் முழுவதும் ஒலிக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில், இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. 


அவரின் (மோடி) செயல்கள், மக்களுக்கு அவர் அளித்து வரும் வழிகாட்டுதல் ஆகியவற்றால் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது. பிரதமரின் சாதனைகள் படைத்த போதிலும், சில தவறான புரிதல்கள், சில அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக அவரது வழிமுறைகள் குறித்து சில பிரிவினர் இன்னும் சில இட சந்தேகங்களை கொண்டுள்ளனர்.


காலப்போக்கில் இந்த தவறான புரிதல்களும் களையப்படும். அரசியல் தலைமையின் பல பிரிவுகளை பிரதமர் அடிக்கடி சந்திக்க வேண்டும். எதிர்கட்சிகளும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். நீங்கள் எதிரிகள் அல்ல போட்டியாளர்கள் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து கட்சிகளும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். 


பிரதமரின் பதவி, குடியரசு தலைவர் பதவி, முதலமைச்சரின் பதவி. அனைத்து பதவிகளும் மதிக்கப்பட வேண்டும், அதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்" என்றார்.


இந்த விழாவில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.


முஸ்லீம்களிடையே முத்தலாக் நடைமுறையை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றியதற்காக பிரதமரை கேரள ஆளுநர் பாராட்டினார். முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூட முஸ்லீம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண சட்டங்களை இயற்ற முடியவில்லை என்பது தான் தனது மிகப்பெரிய வருத்தம் என்று அவர் கூறியதாக ஆரிப் கான் கூறியுள்ளார்.