உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் காலங்களை கடந்து, உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் நிலைத்து வருகிறது. காதல் நினைவு சின்னங்களில் ஒன்றாக திகழும் தாஜ் மஹாலை காண,  ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளில் இருந்தும் இந்தியா வந்து செல்கின்றனர். 


தாஜ் மஹாலில் தொடரும் திருட்டு:


இந்நிலையில், தாஜ் மஹால் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு கிடைத்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தாஜ்மஹாலின் பொலிவை கூட்டும் விலை மதிப்பில்லா கற்கள் ஒவ்வோர் ஆண்டும் திருடப்பட்டு வருகிறது.  இந்த முகலாய காலத்து நினைவு சின்னங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள இந்திய தொல்லியல் துறையானது, காணாமல் போக கூடிய கற்களுக்கு பதிலாக புதிய கற்களை பதித்து வரும் பணியை செய்து வருகிறது.


ரூ.2.5 கோடி செலவு:


இதற்காக கடந்த 7 ஆண்டுகளில் இதுவரை ரூ.2.5 கோடி அளவுக்கு நிதியை செலவிட்டு, தாஜ்மஹாலின்  பல பகுதிகளில் கற்களை நிறுவி வருகிறது என்றும் அந்த தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஷாஜகான் மற்றும் மும்தாஜ் கல்லறை, தாஜ் மகாலின் மாடம் மற்றும் ராயல் கேட் பகுதி போன்ற முக்கிய பகுதியில் இருந்தும் கற்கள் காணாமல் போயுள்ளன எனவும், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.


தாஜ் மஹால் வரலாறு:


முகலாய பேரரசர்களில் ஒருவரான ஷாஜகான், தனது காதல் மனைவி மும்தாஜ் உயிரிழந்ததை அடுத்து, அவரை நினைவுகூரும் வகையில் பெரும் பொருட்செலவில் தாஜ் மஹாலை கட்டி எழுப்பினார். இதற்காக திபெத் மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அவை கொண்டு வரப்பட்டு தாஜ் மகால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர முக்கிய காரணம் தாஜ் மஹாலின் கட்டட அமைப்பு மட்டுமின்றி,  அதன் அழகை மேம்படுத்த பொருத்தப்பட்டுள்ள உலகின் அதிக விலை உயர்ந்த பல்வேறு விதமான பளிங்கு கற்களும் தான். 


குறிப்பாக தாஜ் மஹாலில் பொருத்தப்பட்டுள்ள வெள்ளை நிற கற்கள் அதிக விலை உயர்ந்தவை. இந்த கற்களின் சூரிய ஒளியை பிரதிபலிக்கும்  தன்மையை கொண்ட காரணத்தால் தான், காலை, மாலை மற்றும் இரவு என 3 வேளைகளிலும் தாஜ் மஹால் வெவ்வேறு நிறங்களில் பிரதிபலிக்கிறது.  அதன்படி,  காலையில் பிங்க் நிறத்திலும், மாலையில் பால் நிறத்திலும்  ஒளிரும் தாஜ் மஹால், இரவில் நிலா ஒளியில் தங்க நிறத்திலும் தோற்றமளித்து  கண்களுக்கு விருந்தளிக்கிறது.