குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவான ஒரு வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.  குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக மம்தா தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் பேசிய மம்தா, குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவான ஒரு வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். வேட்பாளராக சர்த்பவாரை போட்டியிட முடிவு செய்தோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இது தொடர்பாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் விவாதித்தோம் என்றார். இந்தக் கூட்டத்தில் 17 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபெற்றனர்.






சரத்பவாரின் மறுப்பை அடுத்து கோபாலகிருஷ்ண காந்தி, பரூக் அப்துல்லா ஆகியோரிடமும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  


18ஆம் தேதி வாக்குப்பதிவு 


இதன்படி வரும் ஜூலை 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஜூன் 15ஆம் தேதி தொடங்கி ஜூன் 29ஆம் தேதி முடிவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30 ஆம் தேதி நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப்பெற ஜூலை 2ஆம் தேதி கடைசிநாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 18ஆம் தேதி பதிவு செய்யப்படும் வாக்குகள் அனைத்தும் ஜூலை 21ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும், புதிய குடியரசுத் தலைவர் வரும் ஜூலை 25ஆம் தேதி பதவி ஏற்பார் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் குடியரசுத் தலைவருக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவை செயலாளர் பிரமோத் சந்திர மோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


தேர்தல் ஆணையம்  வழங்கும் பேனா மூலமே வாக்குப்பதிவு




குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு ஏற்கப்பட வேண்டும் எனில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் வேட்பாளரை முன்மொழிய வேண்டும். நாடு முழுவதும் 776 எம்.பிக்கள்  மற்றும் 4,809 எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.எல்.சிக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  தேர்தல் ஆணையம் வழங்கும் பேனா மூலம் மட்டுமே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது