50 மீட்டர் தூரம் வரையிலான இலக்கை குறிவைத்து சுடும் இந்தியாவின் முதல் கைத்துப்பாக்கி, இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


துப்பாக்கிகள்:


நவீன உலகின் ஆபத்தான ஆயுதமாக இருப்பது துப்பாக்கிகள் தான். பல்வேறு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த துப்பாக்கிகள் மேம்படுத்தப்பட்டு, புதுப்புது வகையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆரம்ப கட்ட கைத்துப்பாக்கியில் வெறும் 6 தோட்டாக்களை மட்டுமே உட்செலுத்தி சுடப்படும். தற்போது அது பிஸ்டல்ஸ் ஆக மேம்படுத்தப்பட்டு ஒரே மேகசினில் 12 தோட்டாக்கள் வரை பயன்படுத்த முடிகிறது. அதோடு, தூரம், துல்லியம் ஆகியவையும் துப்பாக்கிகளை வேறுபடுத்துகின்றன. இந்நிலையில் தான், நீண்ட தூர இலக்கை குறிவைத்து சுடும் வகையிலான இந்தியாவின் முதல் கைத்துப்பாக்கி, இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


”பிரபல்” கைத்துப்பாக்கி:


அரசுக்குச் சொந்தமான அட்வான்ஸ்டு வெபன்ஸ் அண்ட் எக்யூப்மென்ட் இந்தியா (AWEIL) மூலம் தயாரிக்கப்பட்டுள்ள, புதிய கைத்துப்பாக்கி பிரபல் ரிவால்வர் என குறிப்பிடப்படுகிறது. இது மற்ற துப்பாக்கிகளை விட இரண்டு மடங்கு அதிகமாக, அதாவது 50 மீட்டர் தூரம் வரை துல்லியமாக சுடும் வரம்பைக் கொண்டுள்ளது. AWEIL இயக்குநரின் கூற்றுப்படி, பிரபல் கைத்துப்பாக்கியை இன்று முதல் முன்பதிவு செய்யலாம். உரிமம் உள்ள பொதுமக்கள் இதனை வாங்கலாம்.


வடிவமைப்பு:


பிரபல் கைத்துப்பாக்கி எடை குறைவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு,  பக்கவாட்டில் சுழலும் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 700 கிராம் (காட்ரிட்ஜ்கள் இல்லாமல்) மற்றும் பேரல் நீளம் 76 மிமீ. கைத்துப்பாக்கியின் மொத்த நீளம் 177.6 மிமீ ஆகும். முந்தைய துப்பாக்கிகளில் தோட்டாக்களை நிரப்ப, அதனை மடிக்க வேண்டி இருந்தது. ஆனால், புதிய கைத்துப்பாக்கியில் பக்கவாட்டில் உருளும் சிலிண்டர் கொடுக்கப்பட்டுள்ளதால், தோட்டாக்களை நிரப்புவது எளிமையாக இருக்கும். ட்ரிகர் எளிதாக இழுக்கும் வகையில் உள்ளதால் இது வெப்லி ஸ்காட் கைத்துப்பாக்கியை போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது. பெண்களும் பாதுகாப்பிற்காக இதனை எளிதாக பயன்படுத்த முடியும், கைப்பையில் கூட கொண்டு செல்லலாம் என கூறப்படுகிறது. பிரபல் கைத்துப்பாக்கி தனிமனித பாதுகாப்பில் புதிய மைல்கல் என கூறப்படுகிறது.


யார் இந்த AWEIL?


AWEIL என்பது கான்பூரின் அர்மாபூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமாகும். இதன் கீழ் பாதுகாப்புத்துறைக்கான 8 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவை முதன்மையாக இந்திய ஆயுதப் படைகளுக்கும், வெளிநாட்டு இராணுவங்களுக்கும் சிறிய ஆயுதங்கள் மற்றும் பீரங்கித் துப்பாக்கிகளை உற்பத்தி செய்து வருகின்றன. இந்திய ராணுவத்திடம் இருந்து 300 'சாரங்' பீரங்கிகளுக்கான ஆர்டர் உட்பட, இந்த ஆண்டு ரூ.6,000 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தயாரிப்புகளை தயாரிப்பதற்கான ஆர்டரை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் ரூ.450 கோடி மதிப்பிலான ஆர்டர்களைப் பெற்றுள்ளது .