சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள இமாச்சல பிரதேசத்திற்கு, பிரசாரத்திற்காக சென்றிருந்த பிரதமர் மோடி, தனது தேர்தல் பரப்புரையின்போது, அவசர அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்ட சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Continues below advertisement

காங்ரா மாவட்டம் சம்பி கிராமத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள காணொளியில், சாலையில் வேகவாக கடந்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக, பிரதமர் மோடி, தனது வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு காத்திருப்பதும் வாகனம் கடந்து சென்ற பின்பு, சாலையில் செல்வதும் பதிவாகியுள்ளது.

இன்று, சம்பி கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.இமாச்சல பிரதேசத்திற்கு வரும் நவம்பர் 12ஆம் தேதி, வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான முடிவுகள், டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.

Continues below advertisement

இதை முன்னிட்டு நடத்தப்பட்ட தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

விரிவாக பேசிய அவர், "காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் சண்டைகளை நாங்கள் எப்போதும் பார்க்கிறோம். ராஜஸ்தானிலும் பிற பகுதிகளிலும் பார்த்தோம். ஸ்திரமின்மை, ஊழல், மோசடிகளுக்கு காங்கிரஸ்தான் உத்தரவாதம். காங்கிரஸால் இமாச்சல பிரதேசத்திற்கு ஒரு நிலையான அரசாங்கத்தைக் கொடுக்க முடியாது, அவர்களும் அதை விரும்பவில்லை.

இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரசின் ஆட்சி உள்ளது. அதனால்தான், அந்த மாநிலங்களில் இருந்து வளர்ச்சி செய்திகள் வருவதில்லை. அவர்கள் (காங்கிரஸ் தலைவர்கள்) ஊழலைப் பற்றி சிந்தித்து திட்டமிடுகிறார்கள். ஆனால், நாங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கிறோம். இன்று இமாச்சல பிரதேசத்திற்கு நிலையான மற்றும் வலுவான அரசாங்கம் தேவை. 

இமாச்சலப் பிரதேசம் ஒரு வலுவான அரசாங்கத்தையும் இரட்டை இயந்திர சக்தியையும் கொண்டிருக்கும் போது, ​​அது அனைத்து சவால்களையும் சமாளித்து புதிய உயரங்களை எட்டும்" என்றார்.

முன்னதாக, பிரதமர் மோடி குஜராத்தின் காந்திநகரிலிருந்து அகமதாபாத் சென்றிருந்தார். அப்போது, அந்த பாதையில் ஆம்புலன்ஸ் ஒன்று சென்றதால், மோடி தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த வாகனத்திற்கு வழி விட்ட சம்பவமும் அனைவரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

குஜராத் பாஜக ஊடக பிரிவு பகிர்ந்த வீடியோவில், அகமதாபாத் - காந்திநகர் சாலையில் பிரதமர் கான்வாயின் இரண்டு எஸ்யூவி வாகனகள் ஆம்புலன்ஸ் கடந்து செல்வதற்காக சாலையில் ஒதுங்கி சென்றதை காணலாம். ஆம்புலன்ஸ் கடந்து சென்றவுடன் அந்த சாலையில் பிரதமரின் வாகனங்கள் மீண்டும் பயணத்தை தொடங்கின.