17-வது ஜி-20 கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று  இந்தோனேசியாவிற்குப் புறப்படுகிறார்.


17 வது ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு இன்று (நவம்பர் 14) தொடங்கி நவம்பர் 16-ஆம் தேதி வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற இருக்கிறது.


இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ அழைப்பின் பெயரில், பிரதமர் மோடி, ஜி20 மாநாட்டில் பங்கேற்கப் இன்று புறப்படுகிறார். இந்த மாநாட்டின்போது, அடுத்த ஆண்டு ஜி20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பேற்கும் இந்தியாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும். பிரதமர் மோடியிடம், தலைமைப் பொறுப்பை இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ வழங்குவார்.






ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம் என்ற மையக் கருத்தின் அடிப்படையில் இந்த ஜி 20 மாநாட்டில் உலக நாடுகளில் தலைவர்கள் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளனர். சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம் என 3 தலைப்புகளின் கீழ் இந்த மாநாட்டின் மூன்று அமர்வுகள் நடைபெற்று தலைவர்கள் விவாதிக்க இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜி 20 நாடுகள் குழுவில் இடம்பெற்று உள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியாவுக்கு புறப்படுகிறார்.

ஜி-20 கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரேசில், கனடா, சீனா,ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் அடங்கியுள்ளன. 




ஓர் ஆண்டு தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, உலகளாவிய பிரச்சினைகளான பருவநிலை மாறுபாடு, தீவிரவாதப் பிரச்சினை, கடன்பிரச்சினை, கொரோனா தாக்கம்,  உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண முயலும். ஜி 20 நாடுகளின் மாநாட்டின் முடிவில் இந்தோனேசிய அதிபர், பிரதமர் நரேந்திர மோடியிடம் மரபுப்படி ஜி 20 நாடுகளின் தலைவர் பொறுப்பை வழங்குவார். இதனை அடுத்து வரும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி 20 நாடுகளின் மாநாடு நடைபெறும். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட படத்தில் ஜி20 லோகோவில் தாமரை சேர்க்கப்பட்டு உள்ளது.