பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அன்று ரஷிய அதிபர் புதினுடன் உரையாடினார். அப்போது, உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு பற்றி மீண்டும் எடுத்துரைத்தார். இந்த பிரச்சினையில் பேச்சுவார்த்தை மற்றும் தூதர ரீதியாக தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


அவர்களின் தொலைபேசி உரையாடலின் போது, ​​இரு தலைவர்களும் சர்வதேச எரிசக்தி மற்றும் உணவு சந்தைகளின் நிலை உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




2021ஆம் ஆண்டு, டிசம்பரில் அதிபர் புதினின் இந்தியப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் செயல்படுத்தப்பட்டிருக்கிறதா என இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். குறிப்பாக, விவசாயப் பொருட்கள், உரங்கள் மற்றும் மருந்துப் பொருட்களில் இருதரப்பு வர்த்தகத்தை மேலும் ஊக்கப்படுத்துவது எப்படி என்பது குறித்து தங்களின் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இரு தலைவர்களும் சர்வதேச எரிசக்தி மற்றும் உணவு சந்தைகளின் நிலை உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர். இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "உக்ரைனில் தற்போது நிலவும் சூழ்நிலையில், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியாக தீர்வு காண வேண்டும் என இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.




உலகளாவிய மற்றும் இருதரப்பு விவகாரங்களில் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஜெர்மனியில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் உக்ரைன் நெருக்கடி பற்றி பேசிய ஒரு சில நாள்களிலேயே, அதிபர் புதினுடன் பிரதமர் மோடி உரையாடியுள்ளார். உச்ச மாநாட்டிற்கு சென்ற மோடி, "உலகளாவிய பதட்டமான சூழலுக்கு மத்தியில் ஜி 7 நாடுகளும் சிறப்பு அழைப்பாளர்களும் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். அமைதிக்கு ஆதரவாக இந்தியா எப்போதும் செயல்பட்டுள்ளது" என்றார்.


"தற்போதைய சூழ்நிலையில் கூட, நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர பாதையை வலியுறுத்தி வருகிறோம். இந்த புவிசார் அரசியல் பதற்றத்தின் தாக்கம் ஐரோப்பாவில் மட்டும் இல்லை. எரிசக்தி மற்றும் உணவு தானியங்களின் விலை உயர்வு அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது," என ஜி 7 உச்சி மாநாட்டில் மோடி பேசியிருந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண