பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் குஜராத் நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது.


குஜராத் நீதிமன்றம் உத்தரவு:


பிரதமர் மோடியின் கல்லூரி பட்டம் பற்றிய விவரங்கள் வெளியிட தேவையில்லை என கூறிய நீதிமன்றம், வழக்கு தொடர்ந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


பிரதமர் மோடியின் கல்வி தகுதி தொடர்பாக தொடர் சர்ச்சை நீடித்து வருகிறது. கடந்த 1978ஆம் ஆண்டு, பிரதமர் மோடி இளங்கலையில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுதிறது. ஆனால், அவர் பட்டம் பெறவே இல்லை என சர்ச்சை எழுந்தது. 


இதை தொடர்ந்து, 1978ஆம் ஆண்டு பி.ஏ. படித்த அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளையும் அவர்களின் பெயர், எண் ஆகியவற்றையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  கோரி இருந்தார்.


ஆனால், கேட்கப்பட்ட தகவல் மூன்றாம் தரப்பினருடையது எனக் கூறி அதை அளிக்க டெல்லி பல்கலைக்கழகத்தின் மத்திய பொது தகவல் அதிகாரி மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.


இதுகுறித்து மத்திய தகவல் ஆணையம், கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், "வழக்கை விசாரித்ததை தொடர்ந்து முன்னதாக வழங்கப்பட்ட தீர்ப்புகளை பரிசீலனை செய்யப்பட்டதில், முன்னாள் அல்லது இந்நாள் மாணவரின் கல்வி தொடர்பான விவரங்கள் அனைத்தும் பொதுவெளியின் கீழ் வருகிறது. எனவே, கேட்கப்பட்ட தகவல்களை வழங்கமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிடப்படுகிறது" என தெரிவித்தது.


மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகம் 2017ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. முதல் விசாரணையிலேயே, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.


மோடிக்கு ஆதரவாக சுப்பிரமணியம் சுவாமி சர்ப்ரைஸ் ட்வீட்:


அதன்பிறகு வெவ்வேறு காரணங்களுக்காக வழக்கு மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று கொரோனா பெருந்தொற்று.


இதற்கிடையே, பிரதமர் மோடியின் பட்டம் தொடர்பான விவரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு பிறப்பித்த உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், விவரங்களை கேட்டு வழக்கு தொடர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இந்த தீர்ப்பு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார்.


அதில், "மோடியின் கல்வி தொடர்பாக ஏன் இவ்வளவு ஆர்வம்? ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக அமித் ஷாவும், அருண் ஜெட்லியும் சேர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி மோடியின் முதுகலை பட்ட சான்றிதழை வெளியிட்டனர். எனக்கு தெரிந்து அதை, ஏஎன்ஐ செய்தி நிறுவனம் ஒளிபரப்பு செய்தது. கீழே பாருங்கள். நான் சொல்வது சரிதானே?" என குறிப்பிட்டுள்ளார்.


இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் சுவாமி வெளியிட்ட பதிவில், மோடியின் கல்வி சான்றிதழ் போல் ஒரு புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் University என குறிப்பிடப்படுவதற்கு பதில் Unibersity என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த சான்றிதழ் பொய்யானது எனக் கூறி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.