கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 அப்பாவி மக்கள் பலியாகினர். இந்நிலையில், பாகிஸ்தானை பின்னணியாகக் கொண்ட தீவிரவாதிகள் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, பிரதமர் தலைமையில் முப்படைகளுடனான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் சில அதிரடியான உத்தரவுகளை போட்டிருப்பதாக கூறப்படுகிறது.
முப்படைகளுடன் பிரதமர் நடத்திய ஆலோசனை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் விமானப் படைத் தலைவர் அமர் பிரீத் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களையடுத்து, அதில் பாகிஸ்தானின் பங்கும் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இருநாடுகளுக்குமிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கணிப்புகள் வெளியாகிவரும் நிலையில், இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக, உள்துறை அமைச்சகத்தில் ஒரு உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது, இதில் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை இயக்குநர்கள் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்த மோடி.?
தாக்குதலுக்குப் பின்னால் உள்ள பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் பூமியின் இறுதி வரை பின்தொடர்ந்து, அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்குவதாக பிரதமர் மோடி சபதம் செய்துள்ளார். இதனால், நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போது, எங்கு, எப்போது, எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க, முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை மோடி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தின்போது, பயங்கரவாதத்தை நசுக்குவது நமது தேசிய தீர்மானம் என்பதை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தியதாக தெரிகிறது. இந்திய ராணுவத்தின் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்திற்குப் பின், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆஎஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர், பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்ததாக கூறப்படுகிறது. மொத்தத்தில், பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பிரதமர் பச்சைக் கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப்பின், பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன், பாலக்கோட்டில், ஜெய்ஷ் இ முகமது தீவிவாத குழுக்களின் நிலைகள் மீது, இந்தியா துல்லியமான வான்வழித் தாக்குதல் நடத்தி அவைகளை அழித்தது. தற்போது அதேபோல் ஒரு தாக்குதல் மீண்டும் நடத்தப்படும் என்றே அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம்
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தையும் கூட்டியுள்ளார் பிரதமர் மோடி. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்திற்குப்பி, முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.