Pit Bull Attacks King Cobra: வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷம் நிறைந்த ராஜநாகத்தை, வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


சிறுவர்களை காப்பாற்றிய வளர்ப்பு நாய்:


வளர்ப்பு நாய் ஒன்று கொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தை தாக்கி கொன்று,  குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம், உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நடைபெற்றுள்ளது.  சிவகணேஷ் காலனியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்காரரின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த வீட்டின் தோட்டத்தில் பாம்பு புகுந்தது. இதைக் கண்டு குழந்தைகள் அலறியுள்ளனர். இதனை தோட்டத்தின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த பிட் புல் இனத்தைச் சேர்ந்த, வளர்ப்பு நாயான ஜென்னி உணர்ந்து கயிற்றை அறுத்துக் கொண்டு வந்த குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.






ராஜநாகத்தை கொன்ற பிட்-புல் இன நாய்:


இதுதொடர்பான வீடியோவில், சுவற்றின் ஓரம் ஊர்ந்தவாறு வீட்டுக்குள் நுழைய முயன்ற ராஜநாகத்தை, அந்த பிட் புல் நாய் தனது தாடைகளுக்கு இடையில் வலுவாக கவ்வியது. அதன் தலையை கவ்வி பிடித்தபடி, பாம்பை பலமுறை தரையில் ஓங்கி அடித்துள்ளது. இருதரப்புக்கும் இடையேயான மோதல் 5 நிமிடம் வரை நீடித்துள்ளது. ராஜநாகம் எவ்வளவு முயன்றும் அந்த நாயின் பிடியில் இருந்து தப்பமுடியவில்லை. இறுதியில் படுகாயமடைந்த ராஜநாகம் உயிரிழந்தது” தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


உரிமையாளர் பெருமிதம்:


ஜென்னியின் உரிமையாளர் பஞ்சாப் சிங் கூறுகையில், ”பாம்பை கொன்று உயிரைக் காப்பாற்றுவது இது முதல் முறையல்ல. எங்கள் வீடு வயல்களுக்கு அருகில் இருப்பதால், மழைக்காலத்தில் பல பாம்புகள் காணப்படுகின்றன. இதுவரை, ஜென்னி எட்டு முதல் பத்து பாம்புகளைக் கொன்றுள்ளது.  சம்பவம் நடந்தபோது நான் வீட்டில் இல்லை, ஒருவேளை பாம்பு வீட்டிற்குள் நுழைந்திருந்தால், எதுவும் நடந்திருக்கலாம்” என தெரிவித்தார்.


”விலங்குகளிடம் அன்பு காட்டுங்கள்”


தொடர்ந்து பேசியபோது, “இன்றைய உலகில், மக்கள் விலங்குகளை விட்டு விலகிச் செல்வதால், இந்த விலங்குகள் மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்கின்றன. விலங்குகள் மீது நாம் அன்பு காட்ட வேண்டும் என்று நான் நம்புகிறேன். பிட்புல்களைப் பற்றி மக்கள் அடிக்கடி எதிர்மறையான விஷயங்களைச் சொல்கிறார்கள், ஆனால் என்னுடையது யாருக்கும் தீங்கு செய்யவில்லை” என பஞ்சாப் சிங் வலியுறுத்தினார்.