பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என்ற வாதத்தை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரவித்துள்ளார். 


முன்னதாக, பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியைக் குறைக்கப்படவில்லை என்பதை வலியுறுத்தியும், விவசாயிகளிடம இருந்து நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்தும் மாநில அளவில் ஆர்பாட்டம் நடத்த இருப்பதாக தெலுங்கானா பாஜக அறிவித்திருந்தது. 


 



தெலுங்கானா பாஜக தலைவர்


இதற்குப் பதிலளித்த முதல்வர், " பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை (மதிப்புக் கூட்டு வரி) மாநிலங்கள் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்த மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.  தெலுங்கானா இராட்டிர சமிதி பதவியேற்ற பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட வில்லை. அப்படி இருக்கையில், அதனைக் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு  ஒருபோதும்  எழவில்லை.  எந்த முட்டாள் உயர்த்தினாரோ, அவர் தான் குறைக்க வேண்டும்! எங்களை குறைக்க சொல்வது அர்த்தமற்றது என்று தெரிவித்தார்.     


2014க்கு பிந்தைய காலங்களில்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து காணப்படுகிறது. ஆனால், கடந்த 2014ம் ஆண்டில் இருந்து மத்தியில் ஆளும் பாஜக பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகளின் அளவை தொடர்ந்து அதிகரித்துள்ளது.  அதுமட்டுமில்லாமல், இந்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படாத பெட்ரோல் மீதான மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களின் விகிதம் அதிகரிக்கப்பட்டன. கடந்த நிதியாண்டில் கூட, வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு மேல்வாரியாக பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றுக்கு 2.50 ரூபாயும், டீசல் மீது லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாயும் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே, மத்திய அரசு தான் பெட்ரோல் மீதான மேல்வரியைக் குறைக்க வேண்டும்" என்று தெரிவித்தார். 


மேலும், விளிம்புநிலை மக்களை நேரடியாக பாதிக்கும் பெட்ரோல்,டீசல் விலையைக் குறைக்க தொடர்ந்து அழுத்தம் தரப்படும். இந்த போராட்டம் எளிதில் முடிவடையாது. மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டத்தை தொடங்க இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.      


 






 


பெட்ரோலியப் பொருட்களின் மீது மாநில அரசுகளுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்ளும் ஆயத்தீர்வை குறைத்ததாலும், மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் அதிகரித்ததாலும் வருவாய் பங்கீட்டில் மாநில அரசுகள் இழப்பை சந்தித்து வருகின்றன என்றும் தெரிவித்தார்.       


விலை குறைப்பு: 


முன்னதாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட மந்தநிலைக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் ஒரு குறிப்பிடத்தக்க திருப்பத்தைக் கண்டுள்ளது. பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும்- உற்பத்தி, சேவை அல்லது விவசாயம்- குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன. பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், டீசல் மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரியைக் கணிசமாக குறைக்க முடிவு செய்ததாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை (மதிப்புக் கூட்டு வரி) மாநிலங்கள் குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.


 


 இதனைத்‌ தொடர்ந்து, அசாம்‌, கோவா, குஜராத்‌, ஹரியாணா, கர்நாடகா, திரிபுரா, மணிப்பூர்‌, சிக்கிம்‌ மற்றும்‌ புதுச்சேரி ஆகிய மாநிலங்கள்‌ பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரியை 7 ரூபாய் குறைத்துள்ளன. இதன் மூலம்‌ மேற்படி மாநிலங்களில்‌ டீசல்‌ விலை 17 ரூபாயும்‌, பெட்ரோல்‌ விலை 12 ரூபாயும்‌ குறைந்துள்ளது. இது தவிர, உத்தரகாண்ட்‌ மாநிலம்‌ பெட்ரோல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரியை 2 ரூபாயும்‌, டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரியை 7 ரூபாயும்‌ குறைத்துள்ளது. பிஹாரில்‌ பெட்ரோல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரி 3 ரூபாய்‌ 20 காசும்‌, டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரி 3 ரூபாய்‌ 90 காசும்‌ குறைக்கப்பட்டுள்ளது. அருணாச்சாலப் பிரதேசத்தில்‌ பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரி 5 ரூபாய்‌ 20 காசாகக் குறைக்கப்பட்டுள்ளது. மத்தியப்‌ பிரதேசத்தில்‌ பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரி 4 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.