பிரதமர் மோடி மாநிலங்களையில் நிகழ்த்திய உரையில் மத்திய பாஜக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். அதில், அடுத்த 25 வருடங்களுக்கு ஏற்றபடி நாம் திட்டங்களை வகுக்க வேண்டும். 100வது சுதந்திர ஆண்டை சிறப்பாக கொண்டாட நாம் உழைக்க வேண்டும் . இதற்கு முன் நாம் செய்த தவறுகளை நாம் சரி செய்ய வேண்டும். புதிய சவால்களுக்கு தயாராக இருக்க வேண்டும். புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். புதிய முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். என்று பேசினார். அவர் பேசிய உரையில் முக்கியமானவை பின்வருமாறு.


விவசாயிகளுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் அரசு செய்த நன்மைகளாக பிரதமர் பட்டியலிட்டவை, "கொரோனா பாதிப்பு இருந்தபோதிலும், விவசாயம் பாதிக்காத விதமாக, கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு, ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு எந்த தடையும் ஏற்படாதவாறு பார்த்து கொண்டோம். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அதிகமாக வழங்கி உள்ளோம். அவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்தி உள்ளோம். 80 கோடி இந்தியர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் வசிக்கும் 5 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட நேரங்களில் நிறைவு செய்யப்பட்டது. பல்வேறு சவால்கள் இருந்தும் அதனை தோளில் சுமந்தோம்."என்றார்.






கொரோனா தொற்று காலத்தை கடந்த விதம் குறித்தும், எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் பேசுகையில், "நமது தவறுகளை திருத்திக்கொண்டு, புதிய முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும். இந்தியாவை முன்னெடுத்து செல்ல வேண்டும் என சிந்திக்க வேண்டும். இந்தியாவை முன்னேற்றுவதில் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். கடந்த 100 ஆண்டுகளில் கொரோனா போன்ற பிரச்னையை உலக நாடுகள் யாரும் பார்த்தது கிடையாது. கோவிட் பரவ துவங்கியபோது, இந்தியாவில் என்ன ஆகும், இதனால் உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்றுதான் விவாதிக்கப்பட்டது. ஆனால், தன்னம்பிக்கை மற்றும் 130 கோடி இந்தியர்களின் முயற்சியால், இந்தியாவின் முயற்சிகளுக்கு உலகம் முழுவதும் தற்போது பாராட்டு கிடைத்து வருகிறது.


தற்போது இந்தியாவின் பெருமையை அனைவரும் புகழ்கின்றனர். இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது மிகப்பெரிய சாதனை ஆகும். 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி நகர்கிறோம், விரைவில் எட்டுவோம். முன்கள பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அனைவரும் இந்த விஷயத்தில் பாராட்டுக்குரியவர்கள். இந்தியாவில் தடுப்பூசிக்கு எதிராக சிலர் பிரசாரம் செய்தனர். இந்திய தடுப்பூசிகளின் சாதனைகளுக்கு எதிராகவும் பிரசாரம் மேற்கொண்டனர். அதனையெல்லாம் தாண்டியும் இந்த இலக்கை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறோம். சிலர் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கோவிட் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடந்த போது, தடுப்பூசி குறித்து முழு திட்டங்களை விவரிக்க தயாராக இருந்தது. ஆனால், சில கட்சிகள் அந்த கூட்டத்திற்கு வரவில்லை." என்று பேசினார்.






தொழில்துறை வளர்ச்சி குறித்தும் உலக நாடுகள் இந்தியாவை பற்றி கொண்டுள்ள எண்ணம் குறித்தும் பேசுகையில், "அதிக பணவீக்கத்தால், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா பாதிக்கப்பட்டு உள்ளன. ஐமு ஆட்சி காலத்தில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால், 2014 - 20 ல் பணவீக்கம் 4 முதல் 5 சதவீதம் அதிகரித்தது. ஆனால் அதனை கடக்கவும் பெரும் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். சிறுகுறு தொழில் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. பாதுகாப்பு துறையில் சிறு குறு தொழில்துறை துறையினர் நுழைந்துள்ளனர். அவர்கள் மூலம் பாதுகாப்பு துறையில் இந்தியா தன்னிறைவு பெறும். கோவிட் காலத்தில், இந்திய இளைஞர்கள் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்தனர். ஸ்டார்ட் அப்-கள் இந்தியாவின் அடையாளமாக மாறியது. உலகில் இந்தியாதான் ஃபோன் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கிறது. இதற்கு மேக் இன் இந்தியா திட்டம் காரணம். ஸ்டார்ட் அப் உலகில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்திய இளைஞர்கள்தான் இந்த சாதனைக்கு காரணம், இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. மொபைல் போன் உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் உள்ளது. உ.பி., தமிழகத்தில் பொருளாதார வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 200 கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் வெளிநாடுகளுக்கு வழங்கப்படாது என முடிவு செய்தோம். கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு வேலைக்கு ஆட்கள் எடுப்பது இரு மடங்காகி உள்ளது. ஐடி துறையில் 27 லட்சம் பேர் வேலைக்கு சேர்ந்துள்ளனர். கடந்த 2021ல் இபிஎப்.,வில் 1.2 கோடி பேர் புதிதாக இணைந்துள்ளனர். அதில் 65 லட்சம் பேர் 18- 25 வயதுடையவர்கள். 2021 ல் இந்தியாவில் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் ‛யுனிகார்ன்கள்' ஏற்படுத்தப்பட்டன." என்று பேசினார்.






பாஜக அரசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் விதமாகவும், காங்கிரஸ் கட்சி குறித்தும் பேசியபோது, "இந்தியாவின் கூட்டாட்சி அப்படியே வலுவாக உள்ளது. சிலர், தங்களை மறு ஆய்வு செய்துகொள்ள வேண்டும். சில அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த இரண்டு ஆண்டாக தங்களது முதிர்ச்சியின்மையை வெளிக்காட்டியுள்ளனர். இது நாட்டிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் சுயநலத்திற்காக அவர்கள் செய்யும் தந்திரமான விளையாட்டையும் பார்க்கிறோம். வாரிசு அரசியலை தாண்டி காங்கிரஸ் எதையும் பார்த்தது இல்லை. இந்தியாவிற்கு வாரிசு அரசியல் பெரிய பாதிப்பாக உள்ளது. இந்தியா 1947-ல் பிறந்ததாக சிலர் எண்ணி கொண்டு உள்ளனர். ஆனால், ஜனநாயகத்தின் தாய் இந்தியா என்பதை மறந்து விட்டனர். காங்கிரஸ் இல்லாமல் இருந்திருந்தால், எமர்ஜென்சி வந்திருக்காது, சீக்கியர்கள் படுகொலை நடந்திருக்காது, கலவரம் நடந்திருக்காது. மஹாத்மா காந்தியும் காங்கிரஸ் கட்சியை விரும்பவில்லை.


இந்திய தேசிய காங்கிரஸ் என்பதை காங்கிரஸ் கூட்டமைப்பு என பெயர் மாற்றுங்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குஜராத் முதல்வராக இருந்தபோது பெரிய நெருக்கடிகளை சந்தித்தேன். காங்கிரசின் மனநிலை அர்பன் நக்சலைட்டுகளைப்போல் இருக்கிறது. சுதந்திரம் பெற்ற பிறகும், கோவா மாநிலம் தனியாக இருக்க வேண்டும் என்று நேரு விரும்பினார். சுதந்திரத்திற்குப் பிறகும் 15 ஆண்டுகள் கோவா பகுதி கஷ்டப்பட்டது." இவ்வாறு குறிப்பிட்டார்.