கடந்த இரண்டு மக்களவை தேர்தலில் வென்ற பாஜக, 2014ஆம் ஆண்டு முதல் 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க. அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.


எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கம் தந்த கர்நாடக தேர்தல்:


அதற்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்தாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது.


மூன்று மாநிலங்களிலும் பாஜக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, நாடு முழுவதும் கவனம் ஈர்த்தது கர்நாடக தேர்தல். தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் நேரடியாக மோதி கொண்டதால் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. 


இதில், காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதில், 224 சட்டமன்ற தொகுதிகளில், காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றியது. பாஜகவை வீழ்த்த பல்வேறு கட்சிகள் வியூகம் அமைத்து வரும் நிலையில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கம் தந்தது.


பிகாரில் மெகா மாநாடு:


இதற்கிடையே, இந்தாண்டின் இறுதியில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதற்கான களத்தை தயார் செய்ய தொடங்கியுள்ளன எதிர்க்கட்சிகள். அதன் முதல் முயற்சியாக, பிகாரில் மெகா மாநாட்டை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் ஜூன் 12ஆம் தேதி பாட்னாவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த மாநாட்டில், 18 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எதிர்க்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், இதுகுறித்து கூறுகையில், "இது களத்தை தயார் செய்வதற்கான முதற்கட்ட கூட்டம்தான். எதிர்க்கட்சிகளின் முக்கிய கூட்டம் பின்னர் நடத்தப்படும்" என்றார்.


எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், கடந்த வாரம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இதற்கு பின்னர்தான், பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் மாநாடு நடத்துவதற்கான தேதி முடிவு செய்யப்பட்டது.


ஒத்த கருத்துடைய அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வைக்க நிதிஷ் குமார், தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வரும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.