மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை நாடும் முன்பே ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்றும் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை மறந்துவிடக்கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


பஞ்சாபில் முதலமைச்சர் பக்வந்த் மான தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் ஆளுநராக பன்வாரிலால் புர்ரோகித் பதவி வகித்து வருகிறார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தபின் சட்டப்பேரவையில் 27 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் வெறும் 22 மசோதாக்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளார். பண மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தால் தான் பேரவையில் தாக்கல் செய்யப்படும், இந்நிலையில் மாநில அரசின் 3 பண மசோதாக்கல் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி கூடிய 4வது சிறப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தது.


ஆனால் அதற்கு முந்தைய நாள் ஆளுநர் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் 3 மசோதாக்களையும் ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால் நிறுத்தி வைப்பதாக கூறப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பிர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.


அப்போது பேசிய நீதிபதிகள், ” சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குமாறு ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயத்திற்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. இது கவலை அளிப்பதாக உள்ளது.


இப்பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வரை வந்த பிறகுதான் ஆளுநர்கள் செயல்படுகின்றனர். இதற்கு முன்பு, தெலங்கானா மாநில அரசு மனு தாக்கல் செய்த பிறகு, கிடப்பில் இருந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதற்கு முடிவு ஏற்பட வேண்டும். மாநில சட்டப்பேரவையில் நிறை வேற்றப்படும் மசோதாக்களை ஆய்வு செய்ய ஆளுநர்களுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. அதேநேரம், இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பாக ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.


தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை ஆளுநர்கள் மறந்துவிட கூடாது. ஆளுநர்களும், மாநில அரசுகளும் மோதல் போக்கை கடைபிடிப்பது கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் இருதரப்பும் ஆன்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்”  என தெரிவித்துள்ளனர்.  


பஞ்சாப் மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “ நிதி மேலாண்மை, - ஜிஎஸ்டி திருத்தங்கள், குருத்வாரா நிர்வாகம் உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்கள் கடந்த ஜூலை மாதம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. இதனால், அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது”  என வாதிட்டார்.  


பின், பஞ்சாப் ஆளுநர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ மசோதாக்கள் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். மாநில அரசு தேவையின்றி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்த விவரங்களை வரும் 10-ம் தேதி தெரிவிக்கிறேன்” என தெரிவித்தார்.


இதனை கேட்ட நீதிபதிகள், “ மசோதாக்கள் மீது பஞ்சாப் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளார். இது தொடர்பான அறிக்கையை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடுகிறோம். இந்த வழக்கு வரும் 10-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என குறிபிட்டனர்.


இதனை தொடர்ந்து  வாதிட்ட மூத்த வழக்கறிஞர், முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபால், இதே விவகாரம் தொடர் பாக தமிழகம் மற்றும் கேரள ஆளுநர்களுக்கு எதிராக அந்தந்த மாநில அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. அந்த மனுக்களை பும் வரும் 10-ம் தேதி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார். இந்நிலையில், பஞ்சாப் அரசின் மனுவுடன், கேரளா, தமிழ்நாடு அரசுகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதும் 10-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.