ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பாக நடந்த கோர விபத்து நாட்டையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில், உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288ஆக அதிகரித்துள்ளது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார்.


உயிரிழந்தோர் எண்ணிக்கையில் குளறுபடி:


ஆனால், தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து வேறுவிதமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 288 அல்ல என்றும் 275 பேர் உயிரிழந்திருப்பதாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ள ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா, "இறந்தவர்களின் எண்ணிக்கை 275 மட்டும் தான். 288 அல்ல. மாவட்ட ஆட்சியரால் தரவு சரிபார்க்கப்பட்டது. சில உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டது கண்டறியப்பட்டது. எனவே, இறப்பு எண்ணிக்கை 275 ஆக திருத்தப்பட்டுள்ளது. 275 உடல்களில் 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


காயமடைந்த 1,175 பேரில் 793 பேர் சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மதியம் 2 மணியளவில் இந்த எண்ணிக்கை புதுப்பிக்கப்படும்" என்றார்.


விபத்துக்கான காரணம்:


பாலசோர் அருகே இரண்டு தினங்களுக்கு முன்பாக நடந்த விபத்து பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. வரும் புதன்கிழமைக்குள் அந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவையை தொடங்கும் நோக்கில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணன் நேரில் பார்வையிட்டார். அப்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.


ஆய்வுப்பணிகளை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் “ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளார். அது முடிவடைந்து விசாரணை அறிக்கை வந்து சேரட்டும். முன்னதாக விபத்திற்கான காரணம் என்ன, காரணமானவர்கள் யார் என்ன என்பது குறித்து கண்டறிந்துள்ளோம்.  


ரயிலின் தடத்தை மாற்றக்கூடிய மின்னணு இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம். தற்போதைக்கு  இந்த பாதையில் போக்குவரத்தை சீர் செய்வது தான் எங்களது முக்கிய நோக்கமாக உள்ளது.இன்றோடு ரயில் தடத்தை சீரமைத்து புதன்கிழமை அன்று மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். பிரதமர் மோடி சம்பவ இடத்தில் ஆய்வு செய்துள்ளார். கவாச் பாதுகாப்பு அம்சத்தை குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை. அது இருந்திருந்தால் கூட விபத்தை தவிர்த்து இருக்க முடியாது. அதோடு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சொன்னவை எதுவும் விபத்திற்கு காரணமில்லை” எனவும் விளக்கமளித்துள்ளார். 


இந்த ரயில் விபத்துக்கு அமெரிக்க அதிபர் பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.