Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்துக்கு முழுப்பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதவி விலகவேண்டும் என பாஜக உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான  சுப்பிரமணிய சுவாமி ட்வீட் செய்துள்ளார். 


கொல்கத்தாவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் அதாவது ஜூன் 2ஆம் தேதி சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிஷாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தது. இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மோசமான ரயில் விபத்து:


அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கியவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர். 


தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒடிஷாவில் நேற்று அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு, ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதேபோல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர்கள், பலத்த காயம் மற்றும் இலேசான காயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகமும், மத்திய அரசும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. ரயில் விபத்து காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இப்போது தான் நமக்கு தெரியவருகிறது வேகமாக சென்ற ரயில் அந்த தண்டவாளத்தில் செல்ல வேண்டிய ரயிலே இல்லை. மேலும், அந்த தண்டவாளம் மெதுவாக செல்லக்கூடிய ரயில்களுக்கானது. இந்த விபத்துக்குப் பின்னரும் பிரதமர் சொன்னால் தான் பதவி விலகுவேன் என ரயில்வே அமைச்சர் இருக்கக்கூடாது. தானாகவே பதவி விலகவேண்டும். 


பிரதமர் சொல்லும் வரை காத்திருக்காமல் நீங்களாகவே ரயில்வே துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் மோடி திறமையான அல்லது திறமையற்ற அல்லது பொறுத்தமற்ற ஒருவரை அமைச்சராக நியமிப்பதில் உலகிலேயே அவர் தான் தலைசிறந்தவர்.  அதற்கு அவர் விலையும் பெறுகிறார்” என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.