இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை படைத்துள்ளார் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக். நீண்ட காலம் முதலமைச்சராக பதவி வகித்தவர்களில் முன்னாள் மேற்குவங்க முதலமைச்சர் ஜோதி பாசுவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் நவீன் பட்நாயக். 

Continues below advertisement

23 ஆண்டுகள் 138 நாள்கள் முதலமைச்சராக பதவி வகித்து, ஜோதி பாசு செய்த சாதனையை சமன் செய்துள்ளார். இருப்பினும், நீண்ட காலம் முதலமைச்சராக பதவி வகித்தவர் என்ற பெருமை சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங்கை சாரும். இவர், 24 ஆண்டுகள் 166 நாள்கள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

நவீன் பட்நாயக்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை:

Continues below advertisement

51 வயது வரை அரசியல் வட்டாரத்தில் பரிச்சயப்படாத ஒருவரான நவீன் பட்நாயக், தற்போது நாட்டின் பிரபலமான, செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக உள்ளார். அவரது தந்தையும் ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சருமான பிஜு பட்நாயக், 1997ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் தேதி காலமானபோது, நவீன் பட்நாயக்கின் அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.

பிஜு பட்நாயக்கின் மறைவால் ஒடிசா அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டது. அந்த சமயத்தில், அனுதாப அலையை பயன்படுத்திக்கொள்ள முன்னாள் ஜனதா தள கட்சி தலைவர்கள் முயற்சி செய்தனர். தலைமை இன்றி தவித்து வந்த அவர்கள், புதிதாக தொடங்கப்பட்ட பிஜு ஜனதா தள கட்சியை வழிநடத்த பிஜு பட்நாயக்கின் மகனான நவீன் பட்நாயக்கை அழைத்து வந்தனர். 

சொந்த மாவட்டமான கஞ்சமில் அஸ்கா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் நவீன் பட்நாயக்.

ஏழை மக்கள் மத்தியில் செல்வாக்கு:

1998ஆம் ஆண்டில், மத்தியில் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தில் மத்திய எஃகு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவியேற்றார். ஆனால் பின்னர் அவர் 2000இல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக மாநில அரசியலுக்கு திரும்பினார்.

சூப்பர் சூறாவளிக்குப் பிறகு, மறுவாழ்வுப் பணிகளை மோசமாக கையாண்டதன் காரணமாக, ஒடிசாவில் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடும் கோபத்தில் இருந்த சமயத்தில், நவீன் பட்நாயக், மாநில அரசியலுக்கு திரும்பியிருந்தார்.

கடந்த 2000ஆம் ஆண்டில், பாஜக - பிஜு ஜனதா தள கூட்டணி அரசாங்கத்தை நவீன் பட்நாயக் வெற்றிகரமாக வழிநடத்தினார். ஒடிசாவின் 14வது முதலமைச்சராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி பதவியேற்றார். மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணி தோல்வி அடைந்தபோதிலும், மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

2009 ஆம் ஆண்டில், கந்தமாலில் மதக்கலவரம் காரணமாக பாஜகவுடனான தனது கூட்டணியை முறித்துக் கொண்டார் நவீன் பட்நாயக். இதை தொடர்ந்து, பல சவால்களை சந்தித்த போதிலும், அதன் பிறகு நடந்த அனைத்து தேர்தலிலும், பிஜு ஜனதா தள கட்சியே வெற்றிபெற்றது.

அடுத்தடுத்த சட்டப்பேரவை தேர்தல்களில், 147 இடங்களில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று மாநிலத்தின் அசைக்க முடியாத செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வருகிறார் நவீன் பட்நாயக். ஏழை மக்களுக்கான பல்வேறு சமூக நல திட்டங்களை மாநிலம் முழுவதும் அமல்படுத்தியுள்ளார்.