கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.


”பாஜக மட்டும் 370 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும்"


இந்த நிலையில், பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, "அடுத்த 100 நாட்கள் புதிய உற்சாகத்துடனும், புதிய நம்பிக்கையுடனும் பணியாற்ற வேண்டும். அடுத்த 100 நாட்கள் புதிய வாக்காளர்களையும், பயனாளிகளையும், அனைத்து சமூகத்தினரையும் அணுக வேண்டும். அனைவரின் நம்பிக்கையைம் நாம் பெற வேண்டும். 


வாக்காளர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவதையும், பணியாக இருக்க வேண்டும். பாஜகவினர் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் நாட்டிற்கு சேவை செய்து வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியை 400 இடங்களுக்கு மேல் வெற்றி  பெற வைக்க வேண்டும். பாஜக மட்டும்  370 மக்களவை தொகுதிகளில் வெல்ல வேண்டும். 


18 வயதை எட்டிய இளைஞர்கள் நாட்டின் 18வது மக்களவையை தேர்வு செய்ய இருக்கிறார்கள். மூன்றாவது முறையாக ஆட்சியை அனுபவிப்பதற்காக கேட்கவில்லை. நாட்டு மக்களுக்காக உழைக்க விரும்புகிறேன். நான் எனது வீட்டை பற்றி நினைத்து இருந்தால், கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு நான் வீடு கட்டியிருக்க மாட்டேன்” என்றார். 


"கழிவறை பிரச்சினையை பற்றி பேசிய முதல் பிரதமர் நான்”


தொடர்ந்து பேசிய அவர், ”கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது சாதாரண சாதனைகள் அல்ல. ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வாழ்கிறேன். கோடிக்கணக்கான பெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவேன். 


கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பெண்களின் வாழ்க்கையை எளிதாக்க பாஜக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனக்கு பெருமையாக இருக்கிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்துள்ளோம்.


போதிய கழிவறை இல்லாமல் இருப்பது ஒரு பிரச்சினை என்பதை செங்கோட்டையில் இருந்து பேசிய முதல் பிரதமர் நான் தான்.  2047ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவேன். அடுத்த ஐந்து ஆண்டுகள் வளர்ச்சியடைந்த இந்தியாவை மாற்றுவதை எங்களின் நோக்கமாக இருக்கிறது” என்றார் பிரதமர் மோடி. 




மேலும் படிக்க


CM Stalin: தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்! மீனவர்கள் கைதில் பிரதமர் தலையிட வேண்டும் - கொதித்தெழுந்த முதல்வர் ஸ்டாலின்!