ஹரியானா மாநிலத்தில் முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது இறுதிச் சடங்கிற்கு மகள்கள் வர மறுத்த கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. வாழ்க்கை இவ்வளவு மோசமாகி விட்டதா என பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். 

Continues below advertisement

உடல்நலக்குறைவால் உயிரிழந்த தந்தை

ஹரியானா மாநிலம் சோனிபத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மும்பையைச் சேர்ந்த முன்னாள் ஜவுளி வியாபாரியான சிவசரண் ராம் ரத்தன் குப்தா தற்போது வயது மூப்பால் கவனிக்க யாருமின்றி சோனிபட்  மேற்கு ராம் நகரில் உள்ள சமாஜ் கல்யாண் சிக்ஷா சமிதியால் நடத்தப்படும் முதியோர் இல்லத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வசித்து வருகிறார். மகள்கள் 3  பேரையும் திருமணம் செய்து கொடுத்த நிலையில் கவனிக்க யாரும் இல்லாததால் தனது மனைவி மீனாவுடன் இந்த இல்லத்திற்கு வந்தார். ஆனால் அவர் மனைவி ஏற்கனவே உயிரிழந்த நிலையில் ஆகஸ்ட் 4ம் தேதி அதிகாலை சிவசரண் குப்தாவும் உடல்நலக்குறைவால் காலமானார். 

Continues below advertisement

நேரலையில் நடந்த இறுதிச்சடங்கு 

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த முதியோர் இல்லம் அவரின் 3 மகள்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளது. நீங்கள் வருவதாக இருந்தால் தகுந்த ஏற்பாடுகளை செய்வதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால்  நேபாளம், உத்தரப் பிரதேசம் மற்றும் மும்பையில் வசித்து வந்த அவர்களால் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ள முடியவில்லை. 

Also Read: ரேஷன் கார்டு இல்லையா? கவலை வேண்டாம்... புதுச்சேரியில் களமிறங்கிய 'எக்ஸ்ட்ரா லைட்' கேஸ் சிலிண்டர்!

இதில் கொடுமை என்னவென்றால் மூத்த மகள் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளுக்காக ரூ.5,100 ஆன்லைனில் செலுத்தியதுடன் இறுதிச் சடங்குகளை வீடியோ அழைப்பு மூலம் நேரலையில் ஒளிபரப்புமாறு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் உடல் தகனம் முடிந்த பிறகு இறுதிச் சடங்கு நிகழ்வுகளின் வீடியோக்களைத் தங்களுக்கு அனுப்புமாறு மகள்கள் முதியோர் இல்லத்திடம் கேட்டுள்ளனர். 

இதைவிட மோசம் என்னவென்றால் மகள்களில் ஒருவர், இது இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கும்? நாங்கள் சாப்பிடவும் குளிக்கவும் வேண்டும் என முதியோர் இல்ல நிர்வாகிகளிடம் மோசமாக நடந்துள்ளார். தந்தையின் அஸ்தியை பாதுகாத்து வையுங்கள். நாங்கள் நேரம் இருக்கும்போது வந்து பெற்றுக் கொள்கிறோம் என முதலில் தெரிவித்து விட்டு பின்னர் நீங்களே அந்த அஸ்தியை கங்கையில் கரைத்து விடுங்கள் என தெரிவித்துள்ளார்கள். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாஅனது

இவ்வளவு மோசமானதா வாழ்க்கை?

இதனைத் தொடர்ந்து அந்த 3 மகள்களை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்தனர். உங்கள் பெற்றோரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாவிட்டால், இந்த வாழ்க்கையில் என்ன அர்த்தம் இருக்கிறது?.. என ஒருவர் கேட்டுள்ளார். இன்னொருவர், இதைவிட வேதனையானது வேறு என்ன இருக்க முடியும். ஒரு தந்தையின் கடைசி ஆசை தன் மகள்களைச் சந்திப்பதுதான், ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் போனது என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

ஆனால் சிவசரண் ராம் ரத்தன் குப்தா எப்போதும் தன் மகள்களைப் பற்றி பெருமை பேசுவார். தினமும் மகள்களிடம் பேசுவார். கடந்த 20 நாட்களுக்கு முன்பே தந்தையின் உடல்நிலை மோசமானதை மகள்களிடம் தெரிவித்த நிலையில் யாரும் வரவே இல்லை என முதியோர் இல்லத்தினர் ஆதங்கப்பட்டுள்ளனர்.