காங்கிரஸ்காரர்கள் முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் பெயரால் மூன்று நான்கு தலைமுறைகளுக்கு சம்பாதித்துள்ளதாகவும், தற்போது சோனியா காந்தி குடும்பத்துக்கு துணை நிற்காவிட்டால் அனைவரது உணவும் புழு பிடித்துவிடும் என்றும் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஆர்.ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


காந்தி குடும்பத்துக்கு நன்றிக்கடன்


நேஷனல் ஹெரால்டு வழக்கில் (National Herald case) சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டதை எதிர்த்து காங்கிர்ஸ்காரர்ன நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் முன்னாள் சபாநாயகரும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஆர்.ரமேஷ் குமார் இந்தக் கருத்தை முன்னதாக போராட்டத்தின் போது கூறியுள்ளார்.


மேலும் காங்கிரஸ் தலைவர்களிடம் பெற்ற கடனை அடைக்க, காந்தி குடும்பத்துக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் எனவும் இப்போதும் அவர்களுக்கு துணை நிற்கவில்லை என்றால் காங்கிரஸ்காரர்கள் அனைவரது உணவும் புழு பிடித்த உணவாக மாறிவிடும் என்றும் கே.ஆர்.கணேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


விசாரணைக்கு ஆஜரான சோனியா காந்தி


முன்னதாக கொரோனா தொற்று காரணமாக நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத  சோனியா காந்தி, அமலாக்க இயக்குநகரத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.


முன்னதாக இவ்வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்திய குல்தீப் சிங் தலைமையிலான குழுவே சோனியா காந்தியிடமும் விசாரணை நடத்திய நிலையில், இந்த விசாரணை சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேல் நீண்டுள்ளது.


நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் முன்னதாக ராகுல் காந்தியிடம் 5 நாள்களுக்கும் மேல் அமலாக்கத் துறை விசாரணை நடத்திய நிலையில், சோனியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களும், நாடாளுமன்றத்தில் எம்பிக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


பாலியல் வன்கொடுமை பற்றி சர்ச்சைக் கருத்து


முன்னதாக கர்நாடகா சட்டப்பேரவையில் கே.ஆர்.ரமேஷ் குமார் பாலியல் வன்கொடுமையை மட்டுப்படுத்தும் வகையில் பகிர்ந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


கர்நாடகாவில் சட்டப்பேரவை நிகழ்வு ஒன்றை விவரிக்க ”பாலியல் வன்புணர்வு தவிர்க்க முடியாததாக இருக்கும்போது அதனை அனுபவியுங்கள்” என சர்ச்சைக்குரிய கருத்துகூறி மேற்கோள் காட்டிய நிலையில், ரமேஷ் குமாரின் இந்தக் கருத்து கடும் கண்டங்களைப் பெற்றது.


பிரியங்கா காந்தி கண்டனம்


காங்கிரஸ் கட்சியினரே இதற்கு தங்கள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, குமாரின் இந்தக் கருத்தை தான் கடுமையாக எதிர்ப்பதாகவும் "பாலியல் வன்கொடுமை ஒரு கொடிய குற்றம் எனவும், இதுபோன்ற வார்த்தைகளை இவரால் எப்படி உச்சரிக்க முடிந்தது என்றும் கடுமையாக சாடி ட்வீட் செய்திருந்தார். இதனையடுத்து ரமேஷ் குமார் தன் கருத்துக்கு மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.