ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்தியாவில் தேசிய கைத்தறி தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் இந்தியாவின் நெசவு பாரம்பரியத்தையும், அதனை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுகிறது. நாட்டின் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்திற்கு நிறைய பங்களிக்கும் இந்திய நெசவாளர்களுக்கு மரியாதை செலுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

  


வரலாறு


இந்தியாவின் கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாக தேசிய கைத்தறி தினம் முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு ஜவுளி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1905ஆம் ஆண்டு சுதேசி இயக்கத்தின் நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது, வெளிநாட்டு நிறுவனங்களால் இந்திய ஜவுளி விற்பனைக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிரான அமைதியான போராட்டமாகும். இந்த இயக்கம் உள்நாட்டு துணிகள் மற்றும் வடிவமைப்புகளின் பயன்பாட்டில் மீண்டும் எழுச்சியை உருவாக்கியது. இது கைத்தறி நெசவு தொழிலை இந்தியாவில் ஒரு முக்கியமான தொழிலாக வளர்க்க வழிவகுத்தது.



(Image: Istock)


கருப்பொருள்


இந்த ஆண்டு, தேசிய கைத்தறி தினத்தின் கருப்பொருள் "நிலையான நாகரீகத்திற்கான கைத்தறி" என்பதாகும். பவர்லூம் துணிகளுக்குப் பதிலாக ஃபேஷனுக்காக நிலையான துணிகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பதை இந்த தீம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், இந்த நாளைக் கொண்டாடவும், இந்த முக்கியமான தொழில்துறையின் கவனத்தை ஈர்க்கவும் இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.


தொடர்புடைய செய்திகள்: IND vs WI 2nd t20: சீறிப்பாய்ந்த திலக் வர்மா, புஸ்வானமான இந்தியாவின் மற்ற பேட்ஸ்மேன்கள்.. மே.தீவுகளுக்கு 153 ரன்கள் இலக்கு


சென்னையில் கோ-ஆப்டெக்ஸ் நிகழ்வு


தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் அலுவலகத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நடத்தும் விழாவில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு விழாப்பேருரை ஆற்றுகிறார். அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உட்பட, பயிற்சி மையம் மற்றும் விற்பனை மையம் ஆகியவை தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் ஆடை அலங்கார அணிவகுப்பும் நடைபெற உள்ளது.



(Image: unsplash)


முக்கியத்துவம்


தேசிய கைத்தறி தினம் இந்தியாவின் நெசவு பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. இந்த நெசவு முறை இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது. மேலும் இது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த நாளைக் கொண்டாடுவதன் மூலம், இந்த பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் நமது நெசவாளர்களின் மகத்தான பங்களிப்பை நாம் அங்கீகரிக்கிறோம். இன்றும் உற்பத்தி செய்யப்படும் தனித்துவமான கைத்தறி துணிகள் மற்றும் வடிவமைப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இது ஒரு வாய்ப்பாகவும் உள்ளது.