வேறு சமூகத்தைச் சேர்ந்த பையனை திருமணம் செய்து கொண்ட பெண்ணை அவரின் தந்தை ரிஜிஸ்டர் ஆபிஸ்லேயே வைத்து முடியை பிடித்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பொதுவாக தமிழ் உள்ளிட்ட பல்வேறு காதல் படங்களில் ஒரு வாடிக்கையான சீன் எப்போதும் இடம்பிடிக்கும். அதாவது சமூகத்தை சேர்ந்த பெண் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பையனை காதலிப்பார். அதன்பின் இருவரும் காதலிக்க தொடங்கியதும் பெண்ணின் தரப்பில் இருந்து எதிர்ப்பு வரும். அதையும் மீறி இருவரும் திருமணம் செய்தால் ரிஜிஸ்டர் ஆபிஸ்க்கே சென்று அடித்து இழுத்து வருவார்கள். இதுபோன்று உண்மையில் கூட பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. 


சூர்யா, பூமிகா நடிப்பில் உருவான ஜில்லுனு ஒரு காதல் படத்தில் கூட இதுபோன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். இதே பாணியில் ஒரு பெண்ணின் தந்தை முயன்றுள்ளார். ஆனால் அவரின் முயற்சி பலனளிக்கவில்லை. 




கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு ரிஜிஸ்டர் அலுவலகத்தில்தான் இந்த கொடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹரவாலே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பசவராஜ் நாயக். இவருக்கு சித்ரா என்ற மகள் உள்ளார். இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரா என்ற வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். 


இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து இருவரும் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதை பதிவு அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளனர். திருமண சான்றிதழை வாங்குவதற்கு மகேந்திரா - சித்ரா தம்பதி விதானா சவுதாவில் உள்ள துணை பதிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த சித்ராவின் தந்தை பசவராஜ் நாயக், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் திருமண சான்றிதழை கிழிக்க முயன்றார். மேலும் மகளை தன்னோடு வருமாறு இழுத்துள்ளார். 


இதற்கு மறுப்பு தெரிவித்த சித்ராவின் முடியை பிடித்து சிறிது தூரம் இழுத்துச்சென்றார். இதைப்பார்த்த அங்கிருந்த மக்களும் ஊழியர்களும் பசுவராஜ் நாயக்கை தடுத்தனர். அதில் சிலர் அங்கு நடந்த சம்பவங்களை வீடியோ எடுத்தனர். இதையடுத்து சித்ரா தனது கணவருடன் அங்கிருந்து தப்பித்து வெளியே வந்தார். 


இதுகுறித்து சித்ரா போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், தனது தந்தையால் கொலை மிரட்டலுக்கு ஆளாகியுள்ளதாகவும் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நஞ்சன்கூடு போலீசார் பசவராஜ் நாயக்கை வரவழைத்து, தொந்தரவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து மகளின் விவகாரங்களில் தலையிட மாட்டேன் என போலீசாரிடம் உறுதியளித்தார்.


எனினும் பசவராஜ் பதிவு அலுவலகத்தில் அவரது மகளை அடித்து இழுத்துச்செல்ல முயன்ற காட்சிகள் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.